காதலர்களை வழிமறித்து தாக்குதல் நடத்திய சிறுவன் உட்பட 10 பேர் கைது
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே காதலியுடன் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை வழிமறித்து தாக்கிய 10 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக சிறுவன் ஒருவனையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் உச்சிப்புளி அருகே உள்ளது துத்திவலசை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்த இளைஞர் மாரிசங்கர். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் வாலிபர் மாரிசங்கர் தனது காதலியை மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சித்தார்கோட்டை பகுதிக்கு வந்துள்ளார். அப்போது அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்று சரமாரியாக தாக்கியுள்ளார்கள். மேலும் அவரிடம் இருந்த செல்போன், ரூபாய் 1500 ரொக்கம் ஆகியவற்றை அந்த கும்பல் பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து வாலிபர் மாரிசங்கர் தேவிபட்டினம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சித்தார்கோட்டையை சேர்ந்த ரியாஸ்கான், செய்யது, முகமது இர்பான்கான், சகுபர் அலி, முகமது ரபி உள்பட 10 பேர் மீது தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக 18 வயது சிறுவனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி உத்தரவின்பேரில் அந்த சிறுவன் மதுரை மேலூரில் உள்ள சிறுவர் சீர்திருத்த சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.