பலமுறை உல்லாசம் அனுபவித்துவிட்டு ஏமாற்றிய காதலன்.. போலீஸில் புகார் அளித்த கையோடு இளம்பெண் தற்கொலை!
சிதம்பரம் அருகே திருமணம் செய்வதாக கூறி காதலன் ஏமாற்றியதால் மனமுடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
சிதம்பரம்: திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்த காதலன் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் வேதனையடைந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் ஜகஜானந்தா தெருவை சேர்ந்தவர் ஜெயராஜ் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்தார். இவருடைய மனைவி ஜோஸ்பின்.
இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜெயதேவி இவர் எம்.எஸ்சி. படித்து முடித்து, சிதம்பரத்தில் உள்ள வேளாண்மை அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
தனியாக வசித்த பெண்கள்
ஜெயராஜும், அவருடைய மனைவி ஜோஸ்பினும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டனர். இதனால் பெற்றோரை இழந்த பெண்கள் 3 பேரும், சிதம்பரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வந்தனர்.
காதல் வயப்பட்ட ஜெயதேவி
இந்நிலையில் அதேபகுதியை சேர்ந்த கருணாநிதி என்ற இளைஞருக்கும் ஜெயதேவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
போனில் வளர்ந்த காதல்
கருணாநிதி சென்னையில் என்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இருவரும் வெவ்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு சென்ற போதிலும் போன் மூலம் தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
பல முறை உல்லாசம்
இந்த நிலையில், கருணாநிதி, ஜெயதேவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்து இருக்கிறார். இதையடுத்து, தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கருணாநிதியிடம் ஜெயதேவி கேட்டார்.
திருமணம் செய்ய மறுப்பு
ஆனால், அவர் திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயதேவி நேற்று முன்தினம் போலீஸில் புகார் அளித்தார்.
விஷம் குடித்த ஜெயதேவி
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கருணாநிதியிடம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் தனது வாழ்க்கை நாசமாகிவிட்டதை நினைத்து வேதனைப்பட்ட ஜெயதேவி விஷம் குடித்தார்.
சிகிச்சைப் பலனின்றி பலி
இதனைக் கண்ட அவரது சகோதரிகள் இருவரும் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ஜெயதேவி உயிரிழந்தார்.
கடிதத்தை கைப்பற்றிய போலீசார்
இதுபற்றி தகவல் அறிந்த சிதம்பரம் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் உயிரிழந்த ஜெயதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தற்கொலை செய்வதற்கு முன், ஜெயதேவி எழுதிய 3 பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் அவர் தனது முடிவுக்கான காரணத்தை உருக்கமாக எழுதியுள்ளார்.
உடலை பெற மறுப்பு
இதனிடையே தகவலறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த ஜெயதேவியின் உறவினர்கள், ஜெயதேவியை காதலித்து ஏமாற்றிய கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை உடனடியாக கைது செய்யவேண்டும் என வலியுறுத்தினர். மேலும் ஜெயதேவி அளித்த புகாரின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்காத போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை உடலை பெற மாட்டோம் என தெரிவித்தனர்.
ஏமாற்றிய காதலன் கைது
ஜெயதேவி அளித்த புகாரின் பேரில் கருணாநிதியை நேற்று போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.