அடிக்கடி செல்போனில் பேசியதைக் கண்டித்த 80 வயது மூதாட்டியைக் குத்திக் கொன்ற 22 வயது ஆசிரியை
திருச்சி: திருச்சியில், அடிக்கடி தான் செல்போனில் பேசி வந்ததைக் கண்டித்த 80 வயதான மூதாட்டியை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார் 22 வயதேயான இளம் ஆசிரியை ஒருவர். திருச்சியை இந்த சம்பவம் அதிர வைத்துள்ளது.
திருச்சி கோட்டை பட்டவர்த்தி ரோடு பகுதியை சேர்ந்தவர் நளாயினி. இவருடைய தாய் முத்து ரத்தினாவதி (80). இவருடைய கணவர் தங்கவேல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். கணவர் இறந்த பின்னர் முத்துரத்தினாவதி மகள் நளாயினியுடன் வசித்து வந்தார். இவர்களுடைய வீட்டின் மாடி பகுதியில் 2 குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை நளாயினி அவருடைய மகன் கார்த்திக், மருமகள் ஜனனி ஆகியோர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக சென்று விட்டனர். வீட்டில் முத்துரத்தினாவதி மட்டும் தனியாக இருந்தார். உறவினர் திருமணத்துக்கு சென்ற நளாயினி வீட்டுக்கு திரும்பிய போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.
இதையடுத்து மாடியில் குடியிருப்பவர்களின் உதவியோடு கதவை திறந்து நளாயினி வீட்டினுள் சென்று பார்த்தபோது உடலில் பல பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் முத்துரத்தினாவதி பிணமாக கிடந்தார். மேலும் அவர் அணிந்திருந்த 9 பவுன் நகைகளும் மாயமாகி இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நளாயினி கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு கொடுத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீஸ் கமிஷனர் சஞ்சய் மாத்தூர், துணை கமிஷனர் சரோஜ் குமார் தாகூர், உதவி கமிஷனர்கள் ரமேஷ்பாபு, செல்ல முத்து, ராமமூர்த்தி மற்றும் இன்ஸ்பெக்டர் ஞானவேலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் மோப்ப நாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது.
அது வீட்டினுள் மோப்பம் பிடித்து பின்னர் வீட்டின் மாடியில் குடியிருக்கும் ராஜேந்திரன் என்பவர் வீட்டுக்குள் சென்று விட்டு மீண்டும் கீழ் பகுதிக்கு திரும்பியது. இதில் ராஜேந்திரன் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்ததால் அங்கிருந்த அவரது மனைவி மற்றும் மகள், மகனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ரஜேந்திரன் மகளான உடற்கல்வி ஆசிரியை திவ்ய பிரியா (22), முத்துரத்தினாவதியை கொலை செய்தது தெரியவந்தது. திவ்யபிரியா அடிக்கடி செல்போனிலேயே பேசிக் கொண்டிருப்பாராம். இதை முத்துரத்தினாவதி கண்டித்துள்ளார். வயதுப் பெண் எப்போது பார்த்தாலும் போனிலேயே பேசிக் கொண்டிருப்பதா என்று கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்துள்ளார் திவ்ய பிரியா.
இதனால் முத்துரத்தினாவதி தனிமையில் இருப்பதைப் பார்த்து அவரைக் கீழே தள்ளியுள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்தம் கொட்டியதால் பயந்து போன அவர் வீட்டில் சமயலறையில் இருந்த கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்ததும், மேலும் நகையை கொள்ளையடிப்பதற்காக நடந்த கொலை போல காண்பிக்க நகையை பறித்து சாக்கடையில் வீசி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து திவ்யபிரியாவை போலீசார் கைது செய்தனர். செல்போனில் பேசியதற்காக கண்டித்த மூதாட்டியை இப்படிக் கொடூரமாக கொன்ற இளம் பெண்ணின் செயல் அதிர வைத்துள்ளது.