10 பவுன் நகை, ரூ.5,000 ரொக்கத்துடன் இளம்பெண் மாயம்: காதலனுடன் ஓட்டமா?
நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே 10 பவுன் நகையுடன் இளம்பெண் மாயமாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் மேல ஆசாரிபள்ளத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. அவரது மகள் அம்சவள்ளி. பிளஸ்-2 வரை படித்துள்ள அவர், ஆசாரிபள்ளத்தில் உள்ள ஜவுளிக் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்டவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரது பெற்றோர் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. அவர் வீட்டில் இருந்து மாயமானபோது 10 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கத்தையும் எடுத்துச் சென்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து அவரது தந்தை பொன்னுசாமி, ஆசாரிபள்ளம் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்குப்பதிவு செய்து மாயமான அம்சவள்ளியை தேடி வருகின்றார்.
போலீஸ் விசாரணையில், அம்சவள்ளியை அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. அந்த வாலிபரும் தற்போது தலைமறைவாக உள்ளார். எனவே அம்சவள்ளியை, அந்த வாலிபர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. இருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.