கதிராமங்கலத்துக்கு ஆதரவாக மெரினாவில் போராட்டம்? போலீஸ் குவிப்பால் பரபரப்பு
கதிராமங்கலத்துக்கு ஆதரவாக இளைஞர்கள் மெரினாவில் போராட்டம் நடத்தவுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஓஎன்ஜிசியை விரட்ட வேண்டும் என்று கதிராமங்கலத்தில் போராடி வரும் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தவுள்ளதாக கிடைத்த உளவுத் துறை தகவலின்படி அங்கு பாதுகாப்பு முன்னெச்சரியாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கதிராமங்கலத்தில் கடந்த 30-ம்தேதி எண்ணெய் கிணறு அருகே குழாயில் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. இதனால், பதற்றமடைந்த கிராமத்தினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து போலீஸார் தடியடி நடத்தி கலைத்தனர். இதனையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கதிராமங்கலத்தில் எண்ணெய் கிணறு அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஓஎன்ஜிசி நிறுவனம் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று மக்கள் போராட்ட்ம நடத்தினர். இதில் போராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அவர்களை வெளியே விடக் கோரியும், ஓஎன்ஜிசி நிறுவனம் உடனடியாக கதிராமங்கலத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இவர்களது கோரிக்கை நிறைவேற வில்லை.
இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புரட்சி போராட்டம் செய்தது போல் சென்னை மெரினாவில் கதிராமங்கலம் மக்களுக்காக போராட்டம் நடத்த இளைஞர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவுத் துறை தகவலை அடுத்து மெரினாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.