சாக நினைத்தவர் ஒருவர்.. மாண்டவர் இன்னொருவர்.. "கண்ணாத்தாள்" பட பாணியில் ஒரு "தற்கொலை"!
புதுச்சேரி: புதுச்சேரி அருகே தற்கொலை செய்ய நினைத்து ஒருவர் மதுவில் விஷம் கலந்தார். ஆனால் அவரது நண்பர் அது தெரியாமல் எடுத்துக் குடித்து அவர் மரணமடைந்து விட்டார்.
புதுவையை அடுத்த தமிழக பகுதியான உப்புவேலூர் கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மகன் குமார் (27). கார் டிரைவர். இவருக்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு குமாரின் மனைவி அவரிடம் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். குமார் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்தும் அவர் வர மறுத்துவிட்டார்.
இதனால் விரக்தியடைந்த குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். கடைசியாக நண்பர்களுக்கு மது விருந்து அளித்துவிட்டு தானும் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொள்ள குமார் திட்டமிட்டார்.
இதற்காக அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர் பாலாஜி (38) மற்றும் கொம்மடிப்பட்டு கிராமத்தை சேர்ந்த சங்கர் (25) ஆகியோரை மது குடிக்க அழைத்தார். நேற்று மாலை 3 பேரும் அங்குள்ள முந்திரி தோப்பில் அமர்ந்து மது குடித்தனர். அப்போது சேகர் நண்பர்களுக்கு தெரியாமல் தயாராக வைத்திருந்த விஷத்தை டம்ளரில் ஊற்றி அதில் மதுவையும் கலந்தார்.
அந்த டம்ளரை அருகிலேயே வைத்துவிட்டு சிறுநீர் கழிக்க சென்றார். இதனை அறியாமல் பாலாஜி விஷம் கலந்த மதுவை எடுத்து குடித்துவிட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மதுவில் விஷம் கலந்த டம்ளர் காலியாக இருப்பதை கண்டு குமார் அதிர்ச்சியடைந்தார்.
விசாரித்தபோது விஷம் கலந்த மதுவை பாலாஜி குடித்திருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், விஷயம் தெரிந்தால் நண்பர்கள் அடித்து விடுவார்களே என்று பயந்து நைசாக பாலாஜியை அவரது வீட்டில் விட்டு விட்டு போய் விட்டார். சிறிது நேரத்தில் பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் பாலாஜியின் உறவினர்கள் கிளியனூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விரைந்து வந்து பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் குமாரின் செயல் தெரிய வந்தது. அவரைத் தற்போது தேடி வருகிறார்கள்.