சாத்தூர் பேருந்தில் இளைஞர் சுட்டுக்கொலை: இரண்டு பெண்களுக்கு 15 நாள் போலீஸ் காவல்
விருதுநகர்: சாத்தூர் அருகே அரசு பேருந்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு சாத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த 12ம் தேதி நாகர்கோவில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப்பேருந்து சாத்தூரில் நின்ற போது, அந்த பேருந்தில் பயணம் செய்த கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக 9 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 13ம் தேதியன்று மதுரை 3-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், முகமது ரஃபீக் என்பவர் சரணடைந்தார். சாத்தூர் காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதன்படி, ரபீக் கொடுத்த தகவலின்படி இன்று காலை சாத்தூர் அருகே ஓ.மேட்டுப்பட்டியில் பழைய கிணற்றில் தூக்கி வீசப்பட்ட, கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். மேலும் கொலையாளி அணிந்திருந்த உடையையும் இருக்கன்குடி என்ற இடத்தில் போலீசார் கண்டெடுத்தனர்.
மேலும் இந்த சம்பவத்தில் கைதான 2 பெண்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மகாலட்சுமி, லதாவை சிறையில் அடைக்க சாத்தூர் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.