ரூபாய் ஒழிப்பை வாபஸ் பெறக் கோரி செல்போன் டவரில் ஏறி போராடிய இளைஞர்.. மீட்கப்பட்டு கைது
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாததால் சென்னையில் இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மீட்ட போலீஸார் பின்னர் கைது செய்தனர்.
சென்னை: பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே இளைஞர் ஒருவர் செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார். அவரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
பழைய ரூ.500, ரூ.1, 000 நோட்டுக்கள் செல்லாது என கடந்த 8-ந் தேதி இரவு மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கி, தபால் நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து மாற்றிச் செல்கின்றனர். ஏடிஎம்களில் பணம் கிடைக்காமல் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பை கண்டித்து சென்னை, அண்ணா மேம்பாலம் அருகே ரவிச்சந்திரன் (30) என்ற இளைஞர் திடீரென செல்போன் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர் மேலிருந்தபடி தனது கோரிக்கைகள் அடங்கிய தாளை கீழே போட்டார். அதில், ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும். கிரானைட் மற்றும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும். காவிரி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். டாஸ்மாக் மதுக் கடைகளை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
அவரது போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையினர் அவரிடம் சாமர்த்தியமாக பேசினர். பின்னர் அவர் கீழே கொண்டு வரப்பட்டார். அவரை பின்னர் போலீஸார் கைது செய்து கொண்டு சென்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியது.