நடுரோட்டில் அடித்ததாக சூர்யா மீது கொடுத்த புகாரை திரும்பப் பெற்றார் இளைஞர்!
சென்னை: தன்னை சூர்யா அடித்துவிட்டதாக போலீசில் நேற்று புகார் செய்த இளைஞர் பிரேம் குமார், இன்று மாலை புகாரை திரும்பப் பெற்றுக் கொண்டார்.
நேற்று சென்னை அடையாறு சாலையில் கார் - பைக் மோதிக் கொண்ட விவகாரத்தில், இருவருக்கு இடையே நடந்த சண்டையின்போது திடீரென குறுக்கிட்டு நடிகர் சூர்யா பைக்கில் வந்த வாலிபர் பிரேம் குமாரை அடித்ததாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த வாலிபர் அடையாறு காவல் நிலையத்தில் சூர்யா மீது புகார் கொடுத்துள்ளார். ஆனால் தான் யாரையும் அடிக்கவில்லை என்று நடிகர் சூர்யா மறுத்திருந்தார்.
ஆனால் சூர்யா அடித்தது உண்மைதான் என்றும் அவர் தன்னை அடித்ததற்கு விளக்கம் சொல்லியே ஆக வேண்டும் என்றும் இளைஞர் கூறி வந்தார்.
இந்த நிலையில் தனது புகாரை வாபஸ் பெறுவதாக காவல் நிலையத்தில் கைப்பட எழுதிக் கொடுத்துள்ளார் பிரேம் குமார்.
இதுகுறித்து நடிகர் சூர்யாவின் மேனேஜர் கூறுகையில், "அந்த இளைஞர் ஒரு வயதான பெண்மணியை பைக்கில் இடித்துள்ளனர். இடித்ததோடு அந்தப் பெண்மணியை அச்சுறுத்தியுள்ளனர்.
அப்போது அந்த வழியே சென்ற சூர்யா வண்டியை நிறுத்தி அவரை கேள்வி கேட்டுள்ளார். உடனே அது குறித்து காவல்துறையிடமும் தகவல் அளித்து விட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவர் அங்கு இல்லாத சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, அவருக்கெதிராகவே இந்த இளைஞர் சூர்யாவுக்கு எதிராக புகார் பதிவு செய்துள்ளனர்" என்று கூறியுள்ளார்.
In midst of all the drama appreciate your boldness for this message!! Respects!! Pls take care! Thank you All!🙏 https://t.co/Dw3aab0IR1
— Suriya Sivakumar (@Suriya_offl) May 31, 2016