ஈரோட்டில் பாஜகவின் ஜல்லிக்கட்டு முறியடிப்பு.. மாடுகளை விட்டு விட்டு மிரண்டு ஓடிய பாஜகவினர்
ஈரோட்டில் பாஜக சார்பில் நடத்தப்பட்ட ஜல்லிக்கட்டு இளைஞர்களால் முறியடிக்கப்பட்டது. 9 மாடுகளுடன் வந்த பாஜகவினர் மாடுகளை விட்டுவிட்டு மிரண்டு ஓடினார்கள்.
ஈரோடு: ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்த பின்னர், ஈரோட்டில் பாஜகவினர் ஜல்லிக்கட்டை நடத்த முயன்றனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்று கோரும் இளைஞர்கள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து, பாஜகவினரின் ஜல்லிக்கட்டு முறியடிக்கப்பட்டது.
ஈரோட்டு வீரப்பன்பாளையத்தில் பாஜகவினர் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த 9 மாடுகளுடன் ஒன்று கூடினார்கள். தமிழ்நாட்டில் அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தப் போவதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஆனால், ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தும் இளைஞர்கள் பாஜகவினர் ஜல்லிக்கட்டு நடத்தும் இடத்திற்கு சென்று கடுமையான எதிர்ப்பை தெரிவித்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் பாஜகவினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நிரந்தர சட்டம் வேண்டும் என்று போராடி வரும் இளைஞர்கள் உறுதியாக இருந்து பாஜகவினரை எதிர்த்தனர். இதனால், தாங்கள் ஜல்லிக்கட்டு நடத்த கொண்டு வந்த 9 மாடுகளையும் அங்கேயே விட்டுவிட்டு பாஜகவினர் மிரண்டு ஓடினார்கள். இதனையடுத்து, பாஜகவினரின் அரசு சார்பு ஜல்லிக்கட்டு முறியடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு நிரந்தரச் சட்டம் கோரி இளைஞர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.