கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றத்தை நிரூபிக்கட்டும், தண்டனையை ஏற்கிறேன்: டிவியில் தோன்றிய யுவராஜ்
சென்னை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் தன் மீது பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குற்றத்தை நிரூபித்தால் தண்டனையை ஏற்கத்தயார் என்றும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் யுவாராஜ் பரபரப்பு பேட்டியளித்துள்ளார். கோகுல்ராஜ் கொலைக்குப் பின்னர் தலைமறைவான யுவராஜ் இதுநாள் வரை வாட்ஸ் அப் மூலம் குரலை மட்டும் அனுப்பி வந்தார். 100 நாட்களுக்குப் பின் முதன்முறையாக நேரடியாக புதிய தலைமுறைக்கு பிரத்யேகப் பேட்டியளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதி மாறி காதலித்ததாக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர் கோகுல்ராஜ் கடந்த ஜூன் 23ம் தேதி தலை வெட்டப்பட்ட நிலையில் திருச்செங்கோடு அருகே ரயில் தண்டவாளத்தில் கிடந்தார். கோகுல்ராஜ் வழக்கில் தேடப்படும் சங்ககிரி யுவராஜ் மறுநாள் முதல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். அதேநேரத்தில் வாரம் தோறும் வாட்ஸ் அப்பில் செய்திகளை வெளியிடுவதோடு கடிதமும் எழுதுகிறார். இதோ டிவியில் நேரடியாக தோன்றி பேட்டி அளித்துள்ளார். அதேநேரத்தில் போலீசார் கண்களுக்கு மட்டும் யுவராஜ் தட்டுப்படவில்லை. போலீஸ் யுவராஜை கைது செய்யவும் இல்லை.
யார் இந்த யுவராஜ்? முழு பின்னணி என்ன? கோகுல்ராஜ் கொலை வழக்கில் சிக்கியது எப்படி? நாளொரு வாட்ஸ் அப்... தினம் ஒரு கடிதம் என எழுதும் யுவராஜ் திடீரென மீடியா வெளிச்சத்துக்கு வந்த காரணம் என்ன என்பது பற்றிய தகவல்களை முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.
அடிதடி - ஆள்கடத்தல்
சேலம் - கோயம்புத்தூர் பைபாஸ் சாலையில் உள்ள மஞ்சக்கல்பட்டி, யுவராஜின் ஊர். தனியரசுவின் கொங்கு இளைஞர் பேரவையில் 2008ல் சேர்ந்தார். அதில் இருந்தே பரபரப்பு புகார்களில் இவர் பெயர் அடிபட ஆரம்பித்தது. அடிதடி, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் என ஏராளமான பிரிவுகளில் சங்ககிரி, குமாரபாளையம், கரூர், திருச்செங்கோடு, பெருந்துறை உள்ளிட்ட காவல் நிலையங்களில் யுவராஜ் மீது வழக்குகள் பதிவாகின.
கவுண்டர் பேரவை
தனியரசுவுக்கும் யுவராஜூக்கும் இடையே சில ஆண்டுகளில் மோதல் ஏற்படவே, 2011ல் தனியரசுவின் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். ‘தீரன் சின்னமலைக் கவுண்டர் பேரவை' என்று கடந்த ஆண்டு ஆரம்பித்தார். திருச்செங்கோடு பகுதியையே தன் கலாசாரக் கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தார்.
கலாச்சார காவலர்
சேலம், கரூர், நாமக்கல் பகுதிகளில் எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதில் தலையிட்டுத் தீர்த்துவைக்கும் நிலைக்கு மாறினார். தன்னுடைய சாதி மக்களுக்கு நல்லது செய்பவர்போல அவருக்கு உருவம் கிடைத்தது. எழுத்தாளர் பெருமாள்முருகனுக்கு தொல்லை கொடுத்த பின்னணியில் இவரும் இருந்ததாகச் சொல்கிறார்கள்.
கோகுல்ராஜ் கொலை
தலித் சமுதாயத்தைச் சேர்ந்த கோகுல்ராஜ் வேறு சாதியைச் சேர்ந்த சுவாதியை காதலித்தது தெரியவரவே கடத்தி கொன்றுவிட்டார் யுவராஜ் என்கின்றது போலீஸ் தரப்பு. கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜை போலீஸார் தேடத் தொடங்கியதும் தலைமறைவாகி விட்டார். அந்த வழக்கின் விசாரணை அதிகாரி விஷ்ணுப்ரியாவை போனில் தொடர்புகொண்டு, வழக்கு சம்பந்தமாகவே பேசிய ஆடியோவை எடிட் செய்து கடந்த ஞாயிறன்று வெளியிட்டார். இப்போது டிவியில் பேட்டி அளித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
டி.எஸ்.பி விஷ்ணு பிரியா
டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா ஒரு நேர்மையான அதிகாரி. நான் பேசியது அனைத்து மக்களும் கேட்டிருப்பார்கள். இதை திசை திருப்ப வேண்டும் என்று நான் சொல்லவில்லை. திட்டமிட்டும் நான் அதை பதிவு செய்யவில்லை. இதை திசை திருப்ப வேண்டும் என்று நான் நினைத்திருந்தால், விஷ்ணுபிரியாவுடன் பேசிய அடுத்த நாளே நான் வெளியிட்டு இருக்கலாம். அதில் தவறு செய்தவர்களின் ஆதாரங்கள் உள்ளன. அதனால் தான் நான் அதை வெளியிட்டேன்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு
இப்பவும் நான் சொல்வது, கோகுல்ராஜ் கொலை வழக்கு பற்றி எனக்கு கவலை கிடையாது. அந்த வழக்கு, முறையாக புலனாய்வு செய்யப்பட்டு முறையாக விசாரணை நடத்தப்படவில்லை. அப்படி முறையாக விசாரணை நடத்தப்படவும் விஷ்ணுபிரியா விடப்படவில்லை. முழுக்க முழுக்க அவர் கையெழுத்து மட்டுமே போட்டுள்ளார். வேறு எந்தவிதத்திலும் அந்த வழக்கில் அவர் செயல்படவில்லை.
பொதுமக்கள் முன்னிலையில்
இதன் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். நான் தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். காவல்துறை விரும்பினால், நீதிமன்றம் செல்ல வேண்டாம் அவர்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம். ஒரு பொது இடத்தில் பொதுமக்கள், மீடியாக்கள் முன்னிலையில் அவர்கள் தரப்பு நியாயங்கள், வாதங்களை வைக்கட்டும். 9 மணி நேரம் அவர்கள் எடுத்துக்கொள்ளட்டும். நான் ஒரே ஒரு மணி நேரம் எடுத்துக்கொள்கிறேன். என்னை அவர்கள் குற்றவாளி என்று நிரூபித்தால், நான் அதே இடத்தில் தண்டனையை ஏற்றுக்கொள்கிறேன்.
யுவராஜ் சவால்
என்னுடைய இன்னொரு கண்டிஷன், நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் அவங்க கொடுத்துவிட வேண்டும். ''இந்த மாதிரி குற்றத்தை நிரூபிச்சா அவர் தண்டனையை ஏற்றுக்கொள்வார். "நான் தூக்கு தண்டனையை கூட ஏற்க தயார். என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார்". நிரூபிக்க தவறினால், அவங்க எதுவும் செய்ய வேண்டாம், அவங்க 3 பேரும் காவல்துறையைவிட்டே போய்விட வேண்டும்.
ஜோடிக்கப்பட்ட வழக்கு
இதுக்கு அவங்க தயாராக இருந்தால் நானும் தயார். எந்த இடத்தில் என்று சொன்னால் அதே இடத்திற்கு நான் வருகிறேன். இது முழுக்க முழுக்க ஜோடிக்கப்பட்ட வழக்கு. எந்த ஆதாரமும் கிடையாது. இதில், முழுக்க முழுக்க பொய் ஆதாரங்கள், பொய் சாட்சிகள் தான் ரெடி செய்திருக்கிறார்கள். உண்மை என்பது ஒரு துளியும் கிடையாது. முறையாக விசாரணை நடத்தினாலே உண்மை தெரியவரும்.
நிறைய ஆடியோ இருக்கு
காவல்துறையின் உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும் என்றே அவர்கள் இப்படி திசை திருப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது ஊடகங்களுக்கும், ஏன் பொதுமக்களுக்கும் நன்றாக தெரியும். நான் வேறு எந்த காவல்துறை அதிகாரியிடமும் நான் பேசவில்லை. விஷ்ணுபிரியாவுடன் ஒரு மணி நேரம் 3 நிமிடம் 24 செகண்ட் பேசி இருக்கிறேன். தற்போது வெளியிடப்பட்டது போல் இன்னும் நிறைய இருக்கிறது. அதையெல்லாம் வெளியிட்டால் இன்னும் பிரச்னை வரும்.
ஆதாரம் என்னிடம் இருக்கு
விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கும், கோகுல்ராஜின் கொலை வழக்கும் வேறு வேறு கிடையாது. இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னி பிணைந்தவை. அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதற்கு என்னிடம் இன்னும் வலுவான ஆதாரங்கள் இருக்கிறது. போகப்போக இன்னும் தெரியும். இப்போது காவல்துறை என்னை பிடிக்க துடித்துக் கொண்டிருப்பது இந்த வழக்குக்காக அல்ல.
சந்திக்கத் தயார்
என்னுடைய ஆடியோவை வெளியிட்ட பிறகு தான் என்னை பிடிக்க 3 தனிப்படை அமைத்திருக்கிறார்கள். இதுவரை நான் 6 ஆடியோக்களை வெளியிட்டு இருக்கிறேன். அதை மறுப்பதற்கு இல்லை. என் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியும் என்றால் நான் அதை எந்த நேரமும் சந்திக்க தயார்.
தலைமறைவு யுவராஜ்
நூறு நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தலும் நண்பர்கள், உறவுகள் புண்ணியத்தில் நன்றாகவே இருக்கிறார் யுவராஜ். வீரப்பன் போல தாடி மீசை எல்லாம் வைக்கவில்லை. வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டையில் நன்றாக ஷேவ் செய்த முகத்தோடு டிவியில் கோகுல்ராஜ் கொலை வழக்கு பற்றியும் விஷ்ணு பிரியா தற்கொலை பற்றியும் எந்தவித பதற்றமும் இன்றி நிதானமாகவே பேசினார் யுவராஜ்.
போலீஸ் பதில் என்ன?
காட்டுக்குள் இருந்து கேசட் விட்ட வீரப்பனை கூட நீண்ட தேடலுக்குப் பின்னர் கண்டு பிடித்துவிட்டது போலீஸ். ஆனால் தமிழ்நாட்டிற்குள் தலைமறைவாக இருக்கும் யுவராஜ் டிவியில் பரபரப்பு பேட்டி அளிக்கும் யுவராஜை போலீஸ் கைது செய்யாதது ஏன்? ஆடியோ பேட்டி, வீடியோ பேட்டி என பரபரப்பை கிளப்பி வரும் யுவராஜை வேண்டுமென்றே போலீஸ் தப்பவிடுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.