யுவராஜின் வாட்ஸ் ஆப் ஆடியோ, வீடியோவை வெளியிட்ட "அட்மின்" அமுதரசு கைது
சேலம்: கோகுல்ராஜ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ், வாட்ஸ் அப் மூலம் செய்திகளை வெளியிட உதவியதாக அவரது நண்பர் அமுதரசுவைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான, சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைந்தார்.
யுவராஜ் தலைமறைவாக இருந்த காலத்தில் அடிக்கடி வாட்ஸ் அப் மூலம் தனது கருத்துக்களை அவர் வெளியிட்டு வந்தார். மேலும், சில தனியார் தொலைக்காட்சிகளுக்கும் அவர் பிரத்யேக பேட்டி அளித்தார்.
இதையடுத்து வாட்ஸ் அப் மூலமாக யுவராஜ் ஆடியோ வெளியிட யார் யார் உதவுகிறார்கள் என சிபிசிஐடி போலீசார் தீவிரமாகக் கண்காணித்தனர். இந்நிலையில், வைகுந்தம் கிராமத்தை சேர்ந்த பிரபு, சின்ன எலச்சிப்பாளையத்தைச் சேர்ந்த கிரி என்கிற கிரிதரன், பெலாப்பாளையம் சுரேஷ் என மூவரை போலீசார் கடந்த 8-ம் தேதி கைது செய்தனர்.
அதனைத் தொடர்ந்து 9ம் தேதி ஈரோடு மாவட்டம், பெருந்துறையைச் சேர்ந்த யுவராஜின் நண்பர் அமுதரசு (42), என்பவர் யுவராஜ் 11-ஆம் தேதி நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரணடைய உள்ளதாக தகவல் தெரிவித்தார். இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் அவரையும் தீவிரமாகக் கண்காணித்தனர்.
அப்போது, அமுதரசு சங்ககிரியிலுள்ள யுவராஜின் வீடு, அவரது மாமியார் பாவாயி என்பவரின் வீடுகளில் தங்கிக்கொண்டு அங்கு வரும் செய்தியாளர்கள் மற்றும் யுவராஜின் ஆதரவாளர்களுக்கு யுவராஜூடன் தொடர்பு ஏற்படுத்தி கொடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், சிபிசிஐடி போலீசாரிடம் சரணடைந்த யுவராஜ், தலைமறைவாக இருந்தபோது தனக்கு வாட்ஸ் அப் மூலம் அமுதரசு பல்வேறு தகவல்களை அளித்தது குறித்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து அமுதரசை சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதி, ஏடி.எஸ்.பி ஸ்டாலின், டி.எஸ்.பி.கள் வேலன், ராஜன், ஆய்வாளர்கள் பிருந்தா, பால்ராஜ், எஸ்.ஐ. சண்முகம் ஆகியோர் கொண்ட குழுவினர் கைது செய்தனர். நாமக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.மலர்மதி முன் ஆஜர்படுத்தப்பட்ட அமுதரசுவை, 26-ஆம் தேதி வரை காவலில்வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அமுதரசு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.