நெல்லையில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்
நெல்லை: நெல்லை அருகே மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் சுகாதார துறையினர் அங்கு ஆய்வு செய்து வருகின்றனர்.
ஏர்வாடி பகுதியில் பாத்திமுத்து நகர் பகுதியைச் சேர்ந்த பலர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் காங்கிரஸ் முன்னாள் நகரத் தலைவரான நாசர் மகள் நஸ்ரூதின் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதனால் பொதுமக்கள் பீதியில் இருந்து வந்த நிலையில் மாலையில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராமகணேஷ் உத்தரவின் பேரில் ஏர்வாடி வட்டார மருத்துவ அலுவலர் கலையரசி, ஏர்வாடி மருத்துவ அலுவலர் பிரியாதர்ஷனி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பிரஜான், சுகாதார ஆய்வாளர்கள் சிதம்பரம், ராமசாமி, பாலகிருஷ்ணன், கிராம செவிலியர்கள் அங்கு ஆய்வு மேற் கொண்டனர்.
தெருக்களில் கிருமி நாசனி பவுடர் தெளித்தல், கொசு புழு ஓழிப்பு மருந்துகளை தெளித்தல் உள்ளிட்ட பணிகளை போர்கால அடிப்படையில் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் காய்ச்சலால் இறந்ததாக கூறப்பட்ட நஸ்ரூதின் வேறு காரணத்தால் இறந்ததாக சுகாதார துறையினர் கூறியதால் பொதுமக்கள் குழப்பத்திலும், பயத்திலும் உள்ளனர்.