தீனதயாளன் அளித்த க்ளூ... புதுச்சேரியில் ரூ. 50 கோடி மதிப்புள்ள 11 பழங்கால சிலைகள் மீட்பு- வீடியோ
புதுச்சேரி: சிலை கடத்தல் மன்னன் தீனதயாளிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு புதுச்சேரியில் கலைப்பொருட்கள் விற்பனைக் கூடம் நடத்தி வரும் தொழிலதிபர் புஷ்பராஜன் என்பவர் சிலைகளை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் புஷ்பராஜனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தீனதயாளனுக்கு விற்றது போக மீதமுள்ள சிலைகளை புதுச்சேரியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து இருப்பதாக புஷ்பராஜன் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சென்ற போலீசார், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு மைதானம் அருகே கோலஸ் நகரில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 11 பழங்கால சாமி சிலைகளைப் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக புஷ்பராஜனின் மேலாளர் ரஞ்சித்(35) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்பு ரூ. 50 கோடியைத் தாண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.