ஜெ. மறைவால் மனமுடைந்து வேலையை துறக்கும் போலீஸ்காரர்.. கோவில் கட்டி வழிபடப் போவதாக அறிவிப்பு- வீடியோ
தேனி: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, தேனியில் போலீஸ்காரர் ஒருவர் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு, அவருக்கு கோவில் கட்டி வழிபடப் போவதாக அறிவித்துள்ளார். தேனி மாவட்டம் குச்சனூரைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் ஓடப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் காவலராக பணி புரிந்து வருகிறார். கடந்த 1999ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு வரை போயஸ்கார்டனில் ஜெயலலிதாவின் பாதுகாவலர்களில் ஒருவராக பணி புரிந்த இவருக்கு, சிறுவயது முதலே ஜெயலலிதா மீது பாசம் அதிகம் எனக் கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபோது, போலீஸ் சீருடையிலேயே மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்நிலையில் தற்போது ஜெயலலிதாவின் திடீர் மறைவை ஜீரணிக்க முடியாமல் தனது பணியை ராஜினாமா செய்ய இருப்பதாக வேல்முருகன் அறிவித்துள்ளார். மேலும், தனது சொந்த ஊரில் ஜெயலலிதாவிற்கென தனியே கோவில் கட்டி வழிபடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வேல்முருகன் நீச்சல் உட்பட பல்வேறு சாகசங்கள் செய்து சாதனைகள் புரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.