மகிழ்ச்சி தகவல்.. உலகம் முழுக்க பெரு நிறுவனங்களில் இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் அதிகரிப்பு!
சென்னை: அமெரிக்கா, சிங்கப்பூர் உட்பட பல, உலக நாடுகளில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் 58 இந்திய வம்சாவளியினர், மொத்தம், சுமார் 36 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்கள். 1 டிரில்லியன் டாலர் அளவுக்கு இவர்கள் நிறுவனங்கள் வருமானம் ஈட்டுகின்றன என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
உண்மைதான். வாருங்கள், அதன் முழு விவரத்தையும் அறிந்து கொள்ளலாம்.
நாம் மேலே குறிப்பிட்ட இந்த தகவல்களை, அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய புலம்பெயர் அமைப்பு, பட்டியலாக வெளியிட்டுள்ளது.
இந்திய வம்சாவளியினரின் வெற்றி பயணம்
"இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், வணிகத் துறையில் சமீப காலமாக கோலோச்ச ஆரம்பித்துள்ளனர். பலர் தங்கள் வெற்றியை, சமூக மாற்றத்திற்கு பயன்படுத்துகின்றனர்" என்று கூறுகிறது, உலகளாவிய இந்திய புலம்பெயர்ந்த தலைவர்களின் லாப நோக்கற்ற அமைப்பான இந்தியாஸ்போரா (Indiaspora). அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் உட்பட 11 வெவ்வேறு நாடுகளை தலைமையிடமாகக் கொண்ட 58 நிர்வாகிகளின் நிறுவனங்கள், மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. S&P 500 எனப்படுவது, 500 மிகப்பெரிய நிறுவனங்களின் பங்குகளுக்கான பங்குச் சந்தையாகும். அமெரிக்காவில் செயல்படுகிறது. இந்த பங்குச் சந்தையில், இந்தியர்கள் நடத்தும் நிறுவனங்கள் 10 சதவீத மிகை சாதனை செய்துள்ளது.
36 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு
இந்தியாஸ்போரா வணிகத் தலைவர்களின் பதவிக் காலங்களில், அவர்களின் இந்த நிறுவனங்கள், 23 சதவீத கூடுதல், வருடாந்திர வருவாயை வழங்கியுள்ளன. இந்த நிறுவனங்கள் உலகளவில் 36 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குகின்றன. மேலும் 1 டிரில்லியன் டாலர் வருவாய் மற்றும் 4 டிரில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை கொண்டவை. "இந்தியச் சமூகம் அதிகரித்து வரும் இந்த நம்பமுடியாத சாதனையை வெளிப்படுத்த விரும்பினோம்," என்கிறார் சிலிக்கான் வேலியை தலைமையிடமாக கொண்ட தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளரான இந்தியாஸ்போரா நிறுவனர் எம்.ஆர்.ரங்கசாமி.
ஐடி நிறுவனங்கள் மட்டும் இல்லைங்க
"வணிகத் துறையில் இந்திய புலம்பெயர்ந்தோர் ஏற்படுத்தும் நேர்மறை தாக்கம் அதிகம். மாற்றத்திற்கான சமூகமாக நாம் மாறும் அதே நேரம்,
இந்த பட்டியலில், மேலும் பலரும் இணைவார்கள். தங்களின் வணிகத்தை அதிகரிப்பார்கள் என்று நம்புகிறோம்" என்கிறார் ரங்கசாமி.
இந்திய தலைமை நிர்வாக அதிகாரி என்றாலே தொழில்நுட்பத் துறைதான் என்ற ஸ்டீரியோ டைப் உடைக்கப்பட்டுள்ளது.
இந்த 58 தலைமை நிர்வாக அதிகாரிகள், வங்கி, மின்னணு, நுகர்வோர் பொருட்கள் மற்றும் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ளனர். இந்த நிர்வாகிகள் 37 வயதிலிருந்து, 74 வயதுக்கு உட்பட்டவர்கள். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்த பெரு நிறுவன நிர்வாகிகளின் சராசரி வயது 54 ஆகும்.
மனிதாபிமான உதவிகள்
கொரோனா வைரஸ் தொற்றுநோய் காலத்தில், இந்த நிறுவனங்கள் ஏராளமான மனிதாபிமான உதவி பங்களிப்புகளைச் செய்துள்ளன. மேலும், அவர்கள் தங்கள் ஊழியர்களையும், வாடிக்கையாளர்களையும், அவர்களின் விநியோகச் சங்கிலியையும் நல்லபடியாக கவனித்துக் கொள்கிறார்கள். இந்த பட்டியலில் உள்ள பல நிர்வாகிகள் தொழிலோடு நிறுத்திக் கொள்வதில்லை. இன சமத்துவம் மற்றும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும் கை கோர்க்கிறார்கள். கறுப்பின சமூகத்தினருடன் சேர்ந்து நிற்பதை உறுதி செய்ய பிளாக் லிவ்ஸ் மேட்டர் போன்ற விஷயங்களில் தீவிரமான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.
பெப்சி இந்திரா நூயி முன்னோடி
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தலைமை நிர்வாக அதிகாரிகளின் பட்டியலில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் மற்றும் உகாண்டா, எத்தியோப்பியா, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் பிறந்த தொழில் வல்லுநர்களும் அடங்குவர்.
வணிக பிரதிநிதித்துவத்தைப் பொறுத்தவரை, நாம் எவ்வளவு தூரம் வந்துள்ளோம் என்பதைக் கண்டு நான் வியப்படைகிறேன் என்று பார்ச்சூன் 300 நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ராஜ் குப்தா கூறுகிறார். இந்த விஷயத்தில் பெப்சிகோவின் இந்திரா நூயி மற்றும் ஹர்மன் இன்டர்நேஷனலின் தினேஷ் பாலிவால் ஆகியோர்தான் முன்னோடிகள். அப்போது இந்திய வம்சாவளியினர் பெரிய நிறுவன தலைமையிடத்தை பிடிப்பது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. இப்போது, அதுவே, ஃபேஷன் ஆகிவிட்டது.
பிறருக்கும் உதவி செய்ய வேண்டும்
முன்னணி நிறுவனங்களில் நம்மில் ஒரு சிலரே இருந்தார்கள். இப்போது நாம் முக்கியத்துவத்தை அடைந்து வருகிறோம், அடுத்த தலைமுறை அதன் சொந்த மரபுகளை எவ்வாறு விட்டுச்சென்று மேலும் முன்னேறுகிறது என்பதைப் பார்க்க ஆவலாக உள்ளேன் என்று ஆப்டிவ் மற்றும் அவந்தோர் ஆகிய இரு நிறுவனங்களின் தலைவராக பணியாற்றிய இந்தியஸ்போரா உறுப்பினர் குப்தா பெருமையோடு தெரிவித்தார். "இந்தியாவைச் சேர்ந்த பலர் வணிகத்திலும் சமூகத்திலும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருப்பதைப் பார்ப்பது ஊக்கமளிக்கிறது" என்று மாஸ்டர்கார்டின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அஜய் பங்கா கூறினார். நமது கலாச்சாரம் மற்றும் நமது மதிப்புகள் ஒரு பொதுவான தொடக்க புள்ளியாகும். ஆனால் தொற்றுநோய் அல்லது இன அநீதி போன்ற சவால்களைச் சமாளிக்க நாம் இணைய வேண்டும். அப்படி செய்தால், நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையில் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும், என்றார் அவர்
சமூக நீதியில் இந்தியர்கள் பங்கு
கூகுள் ஆல்பபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, பிரதிநிதித்துவக் குழுக்களின் தலைமைத்துவ பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவது மற்றும் கறுப்பின சமூகத்திற்கான பொருளாதார வாய்ப்பு பேக்கேஜ் உள்ளிட்ட இன சமத்துவத்திற்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இந்தியர்களை தலைவர்களாக கொண்ட பல நிறுவனங்கள், கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்ற நிதி உருவாக்கியுள்ளன, அல்லது பங்களித்துள்ளன. பணம் மற்றும் மனிதாபிமான உதவிகள் என மொத்தம் 400 மில்லியனுக்கும் அதிகமான உதவிகள் செய்யப்பட்டுள்ளன என்று இந்தியாஸ்போரா தெரிவித்துள்ளது.
1,000 பெரும் நிறுவனங்களில் 61 நிறுவனங்களுக்கு மட்டுமே பெண்கள் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளனர். இண்டியாஸ்போரா பட்டியலிலும் பெண்கள் மிகக் குறைந்த சதவீதத்தைக் கொண்டுள்ளனர். ஏனெனில் 58 இந்திய வம்சாவளி நிர்வாகிகளில் ஐந்து பெண்கள் மட்டுமே உள்ளனர்.