ஆயக்குடி கொய்யா சந்தையை மூடினா என்ன.. ஆன்லைன் மார்க்கெட் இருக்கே.. அசத்தும் பழனி மகுடீஸ்வரன்
பழனி: கொரோனா லாக்டவுன் காலம் என்பதற்காக முடங்கிக் கிடக்காமல் ஆக்கப்பூர்வமாக ஆன்லைன் மூலமாக தமது வேளாண் பொருட்களை விற்பனை செய்து அசத்தி வருகிறார் பழனி மகுடீஸ்வரன்.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் பழனி இடும்பன் மலை அடிவாரத்தில் வசித்து வருபவர் மகுடீஸ்வரன். எம்பிஏ படித்துள்ள மகுடீஸ்வரன் தன்னுடைய தோட்டத்தில் விளையும் பழங்களை ஆயக்குடி கொய்யா சந்தையில் விற்று வந்தார்.
ஆனால் தற்போது லாக்டவுன் காலம் .. ஆயக்குடி சந்தை மூடப்பட்டுவிட்டது. இதனால் விளைவித்த பழங்களை என்ன செய்வது? இப்படித்தான் யோசித்து சாதித்திருக்கிறார் மகுடீஸ்வரன்.. இனி அவர் சொல்வதை கேட்போம்..
அழிந்த தென்னை சாகுபடி
எம்.பி.ஏ படிப்பு படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தந்தை அங்குசாமி, நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் பராமரித்து வந்த தென்னை மரங்கள் அனைத்தும் பட்டுப்போய்விட்டன. அவ்வளவு உச்சகட்ட வறட்சி.
தென்னைக்கு பதில் மாற்று விவசாயம்
இதனால் மனம் நொந்து போய் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, பழனிக்கு திரும்பினேன். எஞ்சிய தென்னை மரங்களையும் முழுமையாக அழித்துவிட்டு, கொய்யா, மாதுளை மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை பயிரிட்டு இயற்கை முறையில் விவசாயம் செய்ய தொடங்கினேன்.
ஆயக்குடி சந்தையால் ஆதாயம்
அப்போது ஆயக்குடி சந்தை எங்களுக்கு கை கொடுத்து வந்து. இதனால் நல்ல வருவாயும் கிடைத்து வந்தது. ஆனால் கொரோனா லாக்டவுனால் ஆயக்குடி சந்தையும் மூடப்பட்டது. இதனால் என்ன செய்வது என யோசித்து பார்த்தேன்..
நம்பிக்கை தரும் ஆன்லைன் வர்த்தகம்
சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்துவது என தீர்மானித்து முழு வீச்சாக தகவல்களை சேர்த்தேன். இது எனக்கு பெரிய அளவில் கை கொடுத்தது. இப்போது ஆன்லைன் வர்த்தகம் சூடு பறக்கிறது.. லாக்டவுன் என்பதற்காக முடங்காமல் முட்டிமோதிப் பார்த்துவிட வேண்டும்.. இப்படித்தான் நம்பிக்கை விதைக்கிறார் மகுடீஸ்வரன்.