பட்ஜெட் ஏமாற்றம்-பங்குச் சந்தையில் சரிவு
பட்ஜெட் தாக்கலாகிக் கொண்டிருந்தபோதே அதில் ஒன்றுமில்லை என்பது தெரியவந்ததால், சென்செக்ஸ் 308 புள்ளிகள் சரிந்து 9326.75 என்ற அளவைத் தொட்டது.
பொருளாதாரத் தேக்கத்தில் சின்னாபின்னாவாகி வரும் தொழில்துறைக்கு ஊக்கம் தரும் ஒரு வார்த்தை கூட பட்ஜெட்டில் இல்லை.
முன்னதாக ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல் துறைக்கு பட்ஜெட்டில் பெரிய அளவில் சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற கருத்து நிலவியதால் அந்த பங்குகளின் விலைகள் உயர்ந்தன. ஆனால், நிதியமைச்சர் பொறுப்பு வகிக்கும் பிரணாப் முகர்ஜி பட்ஜெட்டை படித்தபோதே அதிலிருந்த 'நிதர்சனம்' இந்தப் பங்கு விலைகளை சரியச் செயதது.
அதே போல வங்கி, பெட்ரோலியம், இரும்பு-எஃகு, மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், தொலைத்தொடர்பு, மின்சாரம் ஆகிய துறைகளின் பங்குகளும் பெரும் வீழ்ச்சி கண்டன.
அதே நேரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத்துறைக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டதால் அதைச் சார்ந்த விதை, உரம் போன்ற நிறுவனங்களின் பங்குகள் விலைகள் மட்டும் உயர்ந்தன.
இதில் காவேரி சீட்ஸ், மோன்சான்ட்டோ இந்தியா விதை நிறுவனம், ஏரிஸ் அக்ரோ ஆகிய நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை.
தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் இதே நிலை தான் நிலவியது.