விலையே இல்லை.. வெள்ளாமை செஞ்சு என்ன பயன்? வாழை சாகுபடியையே கைவிட்ட விவசாயிகள்!
கோவை: கோவை அருகே வாழை இலை, பழங்கள் ஆகியவற்றுக்கு உரிய விலை இல்லாததால் வாழைத்தாருடன் வாழத்தோப்புகளை தீ வைத்து அழிக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் பகுதியில் 500 ஹெக்ட்டேர் பரபளவில் பூவன், நேந்திரன், கதளி உட்பட மூன்று ரக வாழை சாகுபடி நடைபெற்று வருகிறது. வருட பயிரான வாழைக்கு தற்போது சரியான விலை இல்லை.
லாக்டவுன் காலம் என்பதால் வியாபாரிகளும் வரவில்லை. இதனால் மனம் நொந்து போன விவசாயிகள் வாழைத் தோப்புகளை தீயிட்டு அழித்து வருகின்றனர்.
இது குறித்து விவசாயி நடராஜன் கூறுகையில், இலை பயன்பாட்டுக்காக சுமார் 10,000 வாழை கன்றுகள் நட்டு வைத்தோம். நல்ல பலன் தரும் நேரத்தில் கொரோனா வந்தது.
தற்போது வாழை இலை பயன்பாடு முற்றிலும் தடைபட்டுவிட்டது. இலை வாங்க வியாபாரிகள் வரவில்லை. இலவசமாக கொஞ்சம் தந்தோம். இதனால் தற்போது எரிக்கிறோம்.
மனசு வலி தான் ஆயினும் மாற்று பயிர் செய்ய நிலத்தை உழ வேண்டும் என்பதால் தீ வைத்து அழிக்கிறோம். மேலும் எரிந்து கிடைக்கும் சாம்பல் மண்ணுக்கு உரமாகும் என்றார்.
கொரோனா பரவலைத் தடுக்க மும்பையில் ஜூலை 15 வரை 144 தடை உத்தரவு அதிரடி அமல்