வடக்கு இலங்கையில் விவசாய வளர்ச்சிக்கு உதவப் போகிறார் எம்.எஸ்.சுவாமிநாதன்
கடந்த வியாழக்கிழமை இலங்கை சென்ற சுவாமிநாதன், அந்நாட்டு சமூக சேவைத் துறை அமைச்சரும், யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யுமான டக்ளஸ் தேவானந்தாவை கொழும்பில் உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் சந்தித்துப் பேசினார்.
அப்போது சுவாமிநாதனிடம் வடக்கு இலங்கையின் தற்போதைய சமூக, பொருளாதார நிலை குறித்து டக்ளஸ் விவரித்தார்.
மேலும், விவசாயம் வடக்கில் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விளக்கினாராம்.
அதற்கு சுவாமிநாதன், வடக்கில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மீண்டும் விவசாயத் துறையை பொலிவு பெற வைக்க தான் அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின்போது சமூக சேவை மற்றும் சமூக நலத்துறை செயலாளர் ஜெகராஜசிங்கமும் உடன் இருந்தார் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கனவே இலங்கை ஐடி துறைக்கு உதவுவதற்காக இன்போசிஸ் நாராயணமூர்த்தியை அழைத்தது இலங்கை அரசு. அவரும் ஒத்துக் கொண்டார். இருப்பினும் இந்தியாவில், குறிப்பாக தமிழகத்திலிருந்து அதற்கு கடும் ஆட்சேபனைகள் கிளம்பவே, தனது முடிவை வாபஸ் பெற்று, இலங்கை அரசிடம் மறுப்பு தெரிவித்தார் நாராயணசாமி என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில், இலங்கையின் வடக்குப் பகுதியில் விவசாயத்தை நிமிரச் செய்யும் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் சம்மதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.