கோதுமை ஏற்றுமதி இல்லை: பவார் திட்டவட்டம்
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
கோதுமை உற்பத்தியில் நாடு தற்போது தன்னிறைவை அடைந்துள்ளது. இதனால் போதுமான அளவு கையிருப்பு உள்ளது.
கிடங்குகளில் கூடுதலாக உள்ள கோதுமையை ஏற்றுமதி செய்வதற்குப் பதிலாக வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ள குடும்பங்களுக்கான கோதுமை ஒதுக்கீட்டை அதிகரிக்க திட்டமிட்டிருக்கிறோம்.
அதே போல மேலும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதந்தோறும் 25 கிலோ கோதுமை வழங்கும் வகையில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்ய உள்ளோம்.
இது தொடர்பாக இன்று நடக்கவிருந்த அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் பேச இருந்தேன். ஆனால், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு விட்டதால் ஆலோசிக்க முடியவில்லை.
உள்நாட்டு சந்தையில் கோதுமை விலையைக் குறைப்பதற்காக 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வரியில்லாத கோதுமை இறக்குமதி திட்டத்தை மார்ச் 31ம் தேதிக்குப் பிறகும் அரசு நீட்டிக்கும்.
இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி அக்டோபர்-செப்டம்பர் மாதங்களில் 17 மில்லியன் டன்னைத் தாண்டும் என்று நம்புகிறேன். இதன்மூலம் சக்கரையை இறக்குமதி செய்வது பெருமளவு குறையும் என்றார்.