வேளாண் மாணவர்கள் போராட்டம் தீவிரம் - கல்லூரிகள் மூடல்
கோவை: கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள வேளாண் கல்லூரி மாணவர்கள் நேற்று முதல் காலவரையற்ற ஸ்டிரைக்கில் குதித்தனர். இதையடுத்து வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு விட்டன. இதனால் மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேளாண்மைப் படிப்பை முடித்து பல ஆண்டுகளாக வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளை உடனடியாக அரசு வேலையில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அரசுப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் கல்லூரிகள், பெரியகுளம் தோட்டக் கலைக் கல்லூரி மாணவ, மாணவியர் போராட்டம் நடத்தி வந்தனர்.
கடந்த 17 ஆண்டுகளாக தமிழக அரசின் வேளாண்துறை, வேளாண் பொறியியல் துறை ஆகியவற்றில் பணியாளர்கள் நியமனம் இல்ைல. இதனால் படித்துப் பட்டம் பெற்ற வேளாண் பட்டதாரிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். வேலையின்றி தவித்து வருகின்றனர் என்பது மாணவ, மாணவியர்களின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.
புதன்கிழமை வேளாண்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்துடன் மாணவர் பிரதிநிதிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதையடுத்து நேற்று முதல் காலவரையற்றப் போராட்டத்தை மாணவர்கள் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கல்லூரிகளை மூட கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. விடுதிகளையும் மூட உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மாணவ, மாணவியர் நேற்று இரவு முதல் உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் காலவரையற்றப் போராட்டத்தையும் தொடங்கினர். கோவையில், வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவ, மாணவியர் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல்வேறு நூதனப் போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வருகின்றனர். மேலும் பட்டினிப் போராட்டத்தையும் அவர்கள் தொடர்ந்து இன்று 5வது நாளாக மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை தவிர மதுரை, திருச்சி, பெரியகுளம், கிள்ளிக்குளம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள வேளாண் கல்லூரிகள், வனவியல் கல்லூரி, தோட்டக் கலைக் கல்லூரி ஆகியவற்றிலும் மாணவ, மாணவியர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.