மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு
மேட்டூர்: காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று மாலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
ஆண்டுதோறும் ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளின் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படும்.
இருப்பினும் கர்நாடகம் மனது வைத்தால் அல்லது இயற்கை வழி விட்டால்தான் இது முறைப்படி நடக்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக இயற்கை கைவிட்டதாலும், கர்நாடகம் தண்ணீர் விட மறுத்ததாலும் குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர் திறப்பது என்பது நடக்காத காரியமாக இருந்து வந்தது.
இந்த நிலையில் தற்போது அணையில் 100 அடிக்கு மேல் நீர் இருப்பதால் அணையைத் திறக்க வேண்டும் என விவசாயிகள் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்ற முதல்வர் கருணாநிதி ஜூன் 12ம் தேதி முதல் மேட்டூரில் தண்ணீர் திறக்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி இன்று மாலை 6 மணிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அணையைத் திறந்து விடுகிறார். நிகழ்ச்சியில் பாமக தலைவர் ஜி.கே.மணி, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
முதலில் விநாடிக்கு 6,000 கன அடி நீர் என்ற விகிதத்தில் தண்ணீர் திறக்கப்படும். பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்படும்.
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம், திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, ஈரோடு, சேலம், நாமக்கல், கடலூர் ஆகிய மாவட்டங்கள் காவிரித் தண்ணீரால் பயன் பெறும்.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 103.24 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2953 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
மேட்டூர் அணை கட்டப்பட்ட 75 ஆண்டுகளில் ஜூன் 12ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது இது 15வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.