அரிது.. ஒரு பசு மாட்டுக்கு பிறந்த இரு கன்றுக் குட்டிகள்.. ஆச்சரியமாக பார்த்து செல்லும் மக்கள்
சென்னை: கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அம்மாபேட்டை அருகே இரண்டு கன்றுகளை ஈன்ற பசுமாட்டை மக்கள் ஆச்சரியமாக பார்த்துச் செல்கிறார்கள்.
கும்பகோணத்தை அடுத்த பாபநாசம் அம்மாபேட்டை அருகே கோவிலூர் பகுதியைச் சேர்ந்தவர் வேம்பையன் (60). இவரது மனைவி புனிதா (54).
அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற வேம்பையன் தற்போது விவசாயம் செய்து வருகிறார். கால்நடை வளர்ப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.
இவர்கள் ஜெர்சி வகை கலப்பின பசுவை கடந்த ஓராண்டாக வளர்த்து வருகின்றனர். இப்பசு அண்மையில் கர்ப்பம் தரித்து, 2 பெண் கன்றுகளை ஈன்றுள்ளது. தாய்ப்பசுவும், இரு கன்றுகளும் நலமுடன் உள்ளன.
இதுகுறித்து விவசாயி வேம்பையன் கூறியதாவது, "5 வயதுடைய இந்த பசுவை, பக்கத்து ஊரான கருப்பமுதலியார் கோட்டையைச் சேர்ந்த, ஒரு விவசாயியிடம் விலைக்கு வாங்கி, ஓராண்டாக வளர்த்து வருகிறேன். இதற்கு முன்பு, முதல் பிரசவத்தில் ஒரு கன்றினை ஈன்றதாம். தற்போது சினை ஊசி மூலம் கர்ப்பம் தரித்து, கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரு கன்றினை ஈன்றது. மீண்டும் சற்று நேரத்தில் மறு கன்றினையும் ஈன்றது" எனத் தெரிவித்தார்.
சாதாரணமாக பசு மாடுகள் ஒரு கன்று மட்டுமே ஈனும் தன்மையுடையது. அபூர்வமாக இரண்டு கன்றுகளை ஈன்றுள்ளது. இதனை இப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
காவிரி- வைகை குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட அலுவலகம் திறப்பு