Guru Peyarchi: ஆண்டுக்கு ஒருமுறை ராசி மாற்றம் செய்யும் குரு பகவான், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது உச்ச ராசியான கடகத்தில் பிரவேசிப்பது மிகவும் முக்கியமான ஜோதிட நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்த குருப்பெயர்ச்சி காலத்தில் பெரும்பாலான ராசிக்காரர்களுக்கும் நன்மைகள் அதிகரிக்கும். அதே நேரத்தில், பிற கிரகங்களின் அமைப்பு மற்றும் குருவின் விசேஷ பார்வைகள் காரணமாக பலன்களின் அளவு ராசிக்கு ராசி மாறுபடும்.
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 2026 ஜூன் 2 ஆம் தேதி குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்குப் பெயர்ச்சி அடைந்துள்ளார். குருவின் 5, 7, 9 ஆம் பார்வைகள் முறையே விருச்சிகம், மகரம் மற்றும் மீன ராசிகளில் பதிவதால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில், கடகம், சிம்மம், கன்னி ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
கடக ராசியினருக்கு இந்த குருப்பெயர்ச்சி பல முன்னேற்றங்களை வழங்கக்கூடிய காலமாக அமைகிறது. பணியிடத்தில் உங்கள் திறமைக்கு ஏற்ற அங்கீகாரமும் உயர்வுகளும் கிடைக்கும். பொறுப்புகளை திட்டமிட்டு செயல்படுத்தினால் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகலாம். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த குழப்பங்கள் குறைந்து அமைதியான சூழல் உருவாகும். வாழ்க்கைத்துணையுடன் புரிதலும் அன்பும் அதிகரிக்கும். குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் அதிக கண்டிப்பைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பும் செல்வாக்கும் உயரும். உடல்நலத்தில் கழுத்து, மூட்டு மற்றும் பல் தொடர்பான பிரச்சனைகளில் கவனம் தேவை. இரவு நேரங்களில் அதிகமாக விழித்திருப்பதைத் தவிர்க்கவும். அனுமன் வழிபாடு மனநிம்மதியையும் நல்ல பலன்களையும் தரும். சிம்ம ராசியினருக்கு பொறுமையும் நிதானமும் வெற்றிக்கான முக்கிய ஆயுதமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் திறமைகள் உரிய அங்கீகாரத்தைப் பெறும். சக ஊழியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சில முக்கியமான ஆசைகள் நிறைவேறும் அறிகுறிகள் தென்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. பெற்றோர் மற்றும் பெரியோரின் உடல்நலத்தில் முன்னேற்றம் காணப்படும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியும் சில நன்மைகளும் கிடைக்கலாம். வாழ்க்கைத்துணையுடன் விட்டுக்கொடுத்து நடப்பது உறவை மேலும் வலுப்படுத்தும். தொழிலில் வளர்ச்சிக்கான புதிய பாதைகள் திறக்கப்படும். உடல்நலத்தில் இடுப்பு, காது, மூக்கு மற்றும் தொண்டை தொடர்பான பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும். சிவபெருமானை வழிபடுவது சிறப்பான பலன்களைத் தரும். கன்னி ராசியினருக்கு சிந்தித்து செயல்பட்டால் தொடர்ந்து நன்மைகள் கிடைக்கும் காலகட்டமாக இது அமையும். பணியிடத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கிய முடிவுகளை எடுக்கும் முன் அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளை கேட்பது நல்லது. ஆவணங்களில் கையெழுத்திடும்போது கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறலாம். விட்டுக்கொடுத்து நடப்பதன் மூலம் உறவுகளில் நிலையான அமைதி உருவாகும். குழந்தைகள் தொடர்பான சுப நிகழ்ச்சிகள் கைகூடும். பெற்றோர் மற்றும் குடும்ப பெரியோரின் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். மன அழுத்தம், நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மற்றும் தலைவலி போன்றவை ஏற்படக்கூடும். விநாயகர் வழிபாடு தடைகளை நீக்கி விசேஷ நன்மைகளை வழங்கும்.கடகம்
சிம்மம்
கன்னி