திருநெல்வேலி: தென் தமிழகத்தின் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகத் திருவிழா பக்தி பரவசத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி அதிகாலை முதலே கோவில் நடை திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள், உதயமார்த்தாண்ட பூஜை மற்றும் உச்சிக்கால பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கோவில் வளாகம் முழுவதும் பக்தர்களின் கோஷங்களாலும், பக்தி பாடல்களாலும் ஆன்மீக சூழல் நிலவியது.
இந்த திருவிழாவின் முக்கிய சிறப்பம்சமாக கருதப்படும் கடல் மண் சுமக்கும் நேர்த்திக்கடன் நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். முதலில் உவரி கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள், பின்னர் பனை ஓலையால் செய்யப்பட்ட பாரம்பரிய பிளாப்பெட்டியில் கடல் மணலை அள்ளி தலையில் சுமந்து கொண்டு வந்து, கோவில் அருகே குறிப்பிட்ட இடங்களில் கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். குடும்ப நலன், குழந்தை பாக்கியம், உடல் ஆரோக்கியம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுடன் பக்தர்கள் இந்த நேர்த்திக்கடனை செலுத்தினர். குறிப்பாக நீண்டகாலமாக தீராத பிரச்சினைகள், தோல் நோய்கள், உடல் உபாதைகள் மற்றும் குடும்பத் தகராறுகள் நீங்க வேண்டும் என்ற நம்பிக்கையில் ஏராளமானோர் கடல் மணலை சுமந்து வந்து கொட்டினர். உவரி சுயம்புலிங்க சுவாமி கோவிலைச் சுற்றி வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்களும் அதிக அளவில் காணப்பட்டனர். சிலர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டதுடன், சிலர் சிறப்பு அர்ச்சனைகள் மற்றும் அபிஷேகங்களிலும் பங்கேற்றனர். பக்தர்களின் ஐதீக நம்பிக்கையின்படி, கடல் மணலை சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினால் கர்ம வினைகள் நீங்கி, வாழ்க்கையில் உள்ள தடைகள் அகன்று, சுபிட்சம் ஏற்படும் என்று கருதப்படுகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த நேர்த்திக்கடனை மேற்கொண்டு வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய தேவையான அனைத்து வசதிகளையும் செய்திருந்தனர்.