சென்னை: பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மற்றும் தட்கல் முறையில் விண்ணப்பிக்கும் காலக்கெடு ஜூன் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்டன. இந்த ஆண்டு தேர்வில் 95.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 7 லட்சத்து 53 ஆயிரத்து 142 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக நடத்தப்படும் பிளஸ்-2 துணைத்தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தேர்வர்களின் நலனை கருத்தில் கொண்டு விண்ணப்பிக்கும் காலக்கெடு மேலும் இரண்டு நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று மற்றும் நாளை (ஜூன் 4) வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், சிறப்பு அனுமதி திட்டமான தட்கல் முறையில் விண்ணப்பிக்கவும் ஜூன் 4-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது.