ஆப்பு வச்சுட்டாரே மோடி.. ஒரே ஆர்டரில் ஒட்டுமொத்தமாக சரிந்த தங்க கோட்டை! அலர்ட்டான ரிசர்வ் வங்கி!


  • டெல்லி: இந்தியாவில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு திடீரென உயர்த்தியதைத் தொடர்ந்து, தங்கத்திற்கான தேவை கடுமையாக சரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, கடந்த மே 13 முதல் தங்க இறக்குமதி வரி 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்ட நிலையில், சந்தையில் தங்க விற்பனை மற்றும் முதலீட்டு ஆர்வம் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர் பொருளாதார நிபுணர்கள்.

    Advertisement

    தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை ஒரே அடியாக 9 சதவீதம் உயர்த்தியது இந்திய வரலாற்றிலேயே மிகப்பெரிய வரி உயர்வாகக் கருதப்படுகிறது. 2024 ஜூலை மாதத்தில் குறைக்கப்பட்ட வரியை தற்போது முழுமையாக மீண்டும் உயர்த்தியிருப்பது தங்க சந்தையில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    தங்க சந்தை வட்டாரங்களின் மதிப்பீட்டின்படி, மே 27-ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வார காலத்தில் இந்தியாவில் தங்கத் தேவை வெறும் 7.5 டன்னாக மட்டுமே இருந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சுமார் 25 டன் தங்கம் விற்பனையானது.

    தங்க இறக்குமதி வரி

    அதன்படி, தங்கத் தேவை சுமார் 70 சதவீதம் வரை சரிந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த வரி உயர்வுக்குப் பின்னால் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பை பாதுகாக்கும் நோக்கம் இருப்பதாக மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது. உலகளாவிய அரசியல் பதற்றம், ரூபாயின் மதிப்பு சரிவு மற்றும் இறக்குமதி செலவுகள் அதிகரித்துள்ள சூழலில் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    அட்வான்ஸ் ஆத்தரைசேஷன்

    இதனுடன், அட்வான்ஸ் ஆத்தரைசேஷன் திட்டத்தின் கீழ் தங்க இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், வங்கிகள் மூலம் தங்க இறக்குமதி செய்யும் உரிமங்கள் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையின் தாக்கம் குறித்து உலக தங்க கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த தங்கத் தேவை 50 முதல் 60 டன் வரை குறையக்கூடும் என்று அந்த அமைப்பு கணித்துள்ளது.

    வரி உயர்வு

    குறிப்பாக முதலீட்டு நோக்கில் தங்கம் வாங்குபவர்களே அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்றும், திருமணம் மற்றும் பாரம்பரிய தேவைகளுக்காக தங்கம் வாங்குவது தொடரும் என்றும் கூறப்படுகிறது. வரி உயர்வின் மற்றொரு முக்கிய விளைவு கடத்தல் அதிகரிக்கும் அபாயமாகும். இந்தியாவில் கடந்த காலங்களில் தங்க இறக்குமதி வரி உயர்த்தப்பட்ட போதெல்லாம் சட்டவிரோதமாக தங்கம் கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதேபோல், வரி குறைக்கப்பட்ட காலங்களில் கடத்தல் கணிசமாக குறைந்திருந்தது. இதனால், தற்போதைய வரி உயர்வும் மீண்டும் தங்கக் கடத்தலுக்கு வழிவகுக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

    Advertisement

    மெல்ட் அண்ட் ரீமேக்

    இதற்கிடையே, உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. விலை உயர்வு காரணமாக பலர் புதிய நகைகள் வாங்குவதைத் தவிர்த்து பழைய நகைகளை மாற்றிக் கொடுத்து புதிய நகைகள் வாங்கும் முறையைத் தேர்வு செய்து வருகின்றனர். மேலும், அதிக எடையுள்ள நகைகளுக்கு பதிலாக குறைந்த எடையுள்ள நகைகளை வாங்கும் போக்கும் அதிகரித்துள்ளது. நகைக்கடைகளில் "மெல்ட் அண்ட் ரீமேக்" எனப்படும் பழைய நகையை உருக்கி புதிய வடிவில் மாற்றிக் கொள்வதற்கான கோரிக்கையும் அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    வரிச்சுமை

    இதன் மூலம் வரிச்சுமையை ஓரளவு குறைக்க முடியும் என்பதால் பொதுமக்கள் அந்த முறையை விரும்புவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எதிர்கால தங்க விலை குறித்தும் பல்வேறு கணிப்புகள் வெளியாகியுள்ளன. ஐசிஐசிஐ வங்கியின் மதிப்பீட்டின்படி, 2026 முழுவதும் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.5 லட்சம் முதல் ரூ.1.8 லட்சம் வரை நிலைக்கக்கூடும். ரூபாயின் பலவீனம் மற்றும் சர்வதேச சந்தையில் தங்க விலை உயர்வு தொடர்ந்தால், 2027 ஆம் ஆண்டில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1.9 லட்சத்தை எட்டும் வாய்ப்பும் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    தங்கம் மற்றும் எரிபொருள் விலை

    மேலும், தங்கம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக சில்லறை பணவீக்கம் 5 சதவீதத்தை நோக்கி நகரும் அபாயம் இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்கள் தொடர்பாக மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
    மொத்தத்தில், தங்க இறக்குமதி வரி உயர்வு தங்க சந்தையை மட்டுமின்றி, பணவீக்கம், நுகர்வோர் செலவுகள் மற்றும் நாட்டின் பொருளாதார சூழலையும் பாதிக்கும் முக்கிய அம்சமாக மாறியுள்ளது.

    English Summary

    India's gold demand plunges after import duty rises to 15%, raising concerns over prices, smuggling and inflation.