சென்னை: "எனக்கு விரல்கள் இல்லை.. ஆனாலும் மொத்தமாக என் கைகளை கழுவித்தான் ஆகணும்.. 20 செகண்ட் சேலஞ்ச்' என்று சொல்லி கொண்டே கைகளை சோப்பு போட்டு கழுவுகிறார் மாளவிகா ஐயர்!
Recommended Video
மாளவிகா ஐயர்.. சமீப காலமாக பிரபலமாகி வருபவர்.. 13 வயது சிறுமியாக இருந்தபோது, ஒருநாள் ஸ்கூலுக்கு சென்று கொண்டிருந்தார் மாளவிகா.
அப்போது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 2 கைகளையும் இழந்துவிட்டார்.. கால்களிலும் படுகாயம் ஏற்பட்டது. ஒன்றரை வருஷங்கள் ஓய்வில் இருந்தார்.. நடக்கவே முடியாத நிலைமை.. ஆனால் 13 வயது சிறுமிக்கோ எப்படியாவது நடந்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது. இதற்காகவே செயற்கை கால்களை பொருத்திக் கொண்டார். நன்றாக படித்தார்... பிஎச்டி முடித்துவிட்டார்.. வளர்ந்து வரும் உலக தலைவர்கள் என்ற விருதை நியூயார்க்கில் பெற்றவர்.. இந்த விருதை பெற்ற முதல் பெண் என்ற பெருமையும் மாளவிகாவுக்குதான் போய் சேரும்.. பெண்களுக்காக சிறந்த சேவை ஆற்றியதற்காக 2018-ல் நாரி சக்தி புரஷ்கார் விருதை பெற்றவர்.. கடந்த மார்ச் 8ம்தேதி, சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தை சாதனைமிக்க 7 பெண்களிடம் நிர்வகிக்க ஒப்படைத்தார். அந்த வகையில் மோடியின் ட்விட்டர் கணக்கை நிர்வகித்தார் மாளவிகா! இப்போது கொரோனா வைரஸ் பீதியால் கைகளை அவ்வப்போது கழுவி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.. இதற்காக பலரும் விழிப்புணர்வு வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.. அந்த வகையில் மாளவிகாவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.. ஒவ்வொருவரும் அடிக்கடி கைகளை சுத்தமாக கழுவி கொள்ளுங்கள், சானிடைசர் பயன்படுத்துங்கள்.. வீட்டிலேயே இருங்கள்.. சமூக விலகலை கடைப்பிடியுங்கள் என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அத்துடன் தான் கை கழுவுவது போன்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளார். சோப்பை எடுத்து இரு கைகளிலும் தேய்க்கிறார்.. "எனக்கு விரல்கள் இல்லை.. அதனால் மொத்தமாக என் கைகளை கழுவிதான் ஆகணும்... 20 செகண்ட் சேலஞ்ச்" என்று வேகவேகமாக தேய்த்தபடியே சொல்கிறார். கைகளை ஒவ்வொருவரும் அடிக்கடி கழுவ வேண்டும் என்று மாளவிகா ஐயர் தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக சொல்ல முடியாது.. இவரே தலைசிறந்த உதாரணம்.. இதுவே மிகச்சிறந்த விழிப்புணர்வு!