பெங்களூர்: பெங்களூர் அருகே கட்டிய கணவரை கொன்றுவிட்டு, ரத்த வெள்ளத்தில் கிடந்த மகனை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் அருகே அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருந்த கண் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
கர்நாடகா மாநிலம் தார்வார் டவுன் பல்கலைக்கழக சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் கிரண் ஹொன்னன்னவர். மருத்துவரான இவர் தனியார் மருத்துவமனையில் மயக்க மருந்தியல் துறையில் பணியாற்றி வந்தார்.
இவரது மனைவி பிரியா. இவர் கண் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு 10 வயதில் நிகித் உள்பட 3 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தினத்தன்று மாலை வேளையில் பிரியாவை உறவினர்கள் தொடர்பு கொண்டனர். அப்போது கணவர் ஓய்வெடுப்பதாக தெரிவித்தாராம். இதையடுத்து சிறிது நேரம் கழித்து உறவினர்கள் அழைத்த போது பிரியாவும் கிரணும் போனை எடுக்கவில்லையாம். இதனால் பதறிய உறவினர்கள் கிரணின் வீட்டிற்கே சென்று பார்த்தனர். அப்போது கிரண் கத்தியால் குத்துப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். மற்றொரு அறையில் கட்டிலில் படுத்துக் கொண்டு பிரியா செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு அருகே மகன் நிகித்தும் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் கிரணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அது போல் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய நிகித்தை போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீஸார் பிரியாவிடம் விசாரணை நடத்திய போது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்த போது பிரியா, கிரணை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு நிகித்தையும் குத்தியது தெரியவந்தது. பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்த கொடூரமும் நடந்துள்ளது. இதையடுத்து போலீஸார், பிரியாவை கைது செய்தனர். அவர் எதற்காக கணவரை கொன்றார். மகனையும் ஏன் கத்தினார், பெற்ற மகன் உயிருக்கு போராடியும் அவரை காப்பாற்றாமல் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தது ஏன் உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஒரு வேளை பிரியா மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.