பெங்களூர்: கர்நாடகா அமைச்சராக பதவியேற்ற ராமலிங்க ரெட்டி தனது பெங்களூர் நகர வளர்ச்சி துறையை ஒதுக்கவில்லை என்று கூறி அமைச்சர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். இதையடுத்து தான் காங்கிரஸ் கட்சியின் இன்னொரு மூத்த தலைவரான கேஎச் முனியப்பா தனக்கு சமூக நலத்துறை ஒதுக்க வேண்டும். அப்போது தான் அமைச்சர் பொறுப்பை ஏற்பேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் முதல்வர் டிகே சிவக்குமார் அமைச்சரவையில் 2வது விக்கெட் விழுகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக இருந்த சித்தராமையா ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய முதல்வராக டிகே சிவக்குமார் நேற்று முன்தினம் பதவியேற்றார். அவருடன் 13 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் கேஎச் முனியப்பாவும் ஒருவர். இவர் 1991, 1996, 1998, 1999, 2004, 2009 2014 என தொடர்ந்து 7 நாடாளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எம்பியாக இருந்தார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தபோது அமைச்சராகவும் பதவி வகித்தார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் கோலார் தொகுதியில் முனியப்பா போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு அவர் மாநில அரசியலுக்கு திரும்பினார். 2023 சட்டசபை தேர்தலில் பெங்களூர் புறநகரில் உள்ள தேவனஹள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சித்தராமையா அமைச்சரவையில் உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறையின் அமைச்சராக செயல்பட்டு வந்தார். டிகே சிவக்குமார் முதல்வரான பிறகும் கூட கேஎச் முனியப்பாவுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டது. அவர் அமைச்சராக பதவியேற்றார். நேற்று அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டது. அப்போது கடந்த முறையை போலவே உணவு, பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் நலத்துறையை கேஎச் முனியப்பாவுக்கு, டிகே சிவக்குமார் ஒதுக்கீடு செய்தார். கேஎச் முனியப்பா ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்தவர். தனக்கு சமூக நலத்துறை வேண்டும் என்று கோரியிருந்த நிலையில் அவருக்கு அது கிடைக்கவில்லை. இதனால் தற்போது அவர் அதிருப்தியடைந்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ''எனக்கு விருப்பம் இல்லாத துறை வழங்கப்பட்டுள்ளது. துறையை மாற்ற வேண்டும் என்று கட்சி தலைவர்களிடம் கேட்டுள்ளேன். துறையை மாற்றி தரும் வரை அமைச்சராக பொறுப்பேற்கப்போவது இல்லை'' என்று கூறியுள்ளார். தற்போதைய சூழலில் அமைச்சர்கள் யாருக்கும் துறையை மாற்றி கொடுக்க முடியாது என்று முதல்வர் டிகே சிவக்குமார் உறுதியாக கூறிவிட்டார். இதனால் கேஎச் முனியப்பா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பெங்களூர் நகர வளர்ச்சி துறை கிடைக்கவில்லை என்று பெங்களூர் பிடிஎம் லே-அவுட் எம்எல்ஏ ராமலிங்க ரெட்டி இன்று காலையில் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இவருக்கு பெரிய மற்றும் நடுத்தர நீர்ப்பாசனத்துறை வழங்கியதால் அதிருப்தியில் ராஜினாமா செய்துள்ளார். தற்போது கேஎச் முனியப்பாவும் துறையை மாற்றி தர வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தி உள்ளது முதல்வர் டிகே சிவாக்கு புதிய தலைவலியாக மாறி உள்ளது.