வெறும் 20 மைல் கால்வாய்.. இந்தியாவில் கற்பனை செய்ய முடியாத பாதிப்பை ஏற்படுத்தி வருவது எப்படி?


  • டெல்லி: இந்தியாவிற்கு வர்த்தக தலைநகரான மும்பையில் இருந்து கடல் வழியாக பார்த்தால் ஹார்முஸ் நீரிணை சுமார் 1,800 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. அங்குள்ள வெறும் 20 மைல் பரப்பளவு கடல் பரப்பில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, ரூபாய், மதிப்பு. கச்சா எண்ணெய் வரத்து, பங்கு சந்தை என எல்லாவற்றையும் எப்படி எல்லாம் பாதிக்கிறது தெரியுமா? நீங்கள் யாரும் கற்பனை கூட செய்ய முடியாத பாதிப்பு கடந்த 3 மாதங்களாக இந்தியாவிற்கு நடந்து வருகிறது. இந்த கசப்பான உண்மை பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.

    Advertisement

    கடந்த மே மாதத்தில் $28.21 பில்லியனாக இருந்த இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை, ஜூன் மாதத்தில் $30.43 பில்லியனாக அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய்க்காக இந்தியா அதிகமாக செலவிட்ட அதேநேரம், இந்தியாவின் ஏற்றுமதி வளைகுடா பிரச்சனையால் கணிசமாகக் குறைந்துவிட்டது. அதாவது கச்சா எண்ணெய், தங்கம் போன்ற பல்வேறு விஷயங்களுக்காக அதிகப்படியான அன்னிய செலவாணியை இந்தியா செலவு செய்ததால், இறக்குமதி மிகமிக அதிக அளவு அதிகரித்தது. இதனால் இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறை உயர்ந்தது.

    Advertisement

    இதை இன்னும் எளிமையாகப் புரிந்து கொள்ள சூத்திரங்களும் உள்ளது. ஒரு நாடு வர்த்தக உபரி அல்லது பற்றாக்குறையைக் கொண்டுள்ளதா என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள, அதற்கான சூத்திரம் இதோ:

    வர்த்தகப் பற்றாக்குறை/உபரி=மொத்த ஏற்றுமதி-மொத்த இறக்குமதி

    இந்த மதிப்பு நேர்மறையாக (+ve) இருந்தால் அது உபரி; அதுவே எதிர்மறையாக (-ve) இருந்தால் அது பற்றாக்குறை ஆகும்.

    ஜூன் மாதத்தில், இந்தியாவின் பொருட்கள் ஏற்றுமதி மே மாதத்தின் $45.20 பில்லியனிலிருந்து $40.41 பில்லியனாகக் குறைந்துள்ளது. இறக்குமதியும் $73.41 பில்லியனிலிருந்து $70.84 பில்லியனாகக் குறைந்திருக்கிறது. இரண்டுமே குறைந்திருந்தாலும், ஏற்றுமதியை விட இறக்குமதியின் அளவு மிக அதிகமாக உள்ளது. எனவே, இங்கு பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த வர்த்தகப் பற்றாக்குறை 2025 நவம்பர் முதல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2026 மார்ச்சில் இது $20.67 பில்லியனாகக் கணிசமாகக் குறைந்த போதிலும், ஏப்ரல் மாதத்தில் மீண்டும் $28.38 பில்லியனாக உயர்ந்துள்ளது.

    Advertisement
    ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கிய ரஷ்யா.. அமெரிக்கா நினைத்தே பார்க்காத மாற்றங்கள் வரப்போகிறது

    "இந்தியா-பிரிட்டன் இடையேயான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் ஜூலை 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் மிகப்பெரிய இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களில் ஒன்றாகும்" என்று BofAS இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் ஆசியான் பொருளாதார நிபுணர் ராகுல் பஜோரியா கூறியுள்ளார்.

    "இரட்டைப் பங்களிப்பு மாநாடு எனப்படும் சமூக பாதுகாப்பு ஒப்பந்தமும் அதே ஜூலை 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இது பிரிட்டனில் தற்காலிகமாகப் பணிபுரியும் பல இந்திய வல்லுநர்கள் இரு நாடுகளிலும் சமூக பாதுகாப்புப் பங்களிப்புகளை செலுத்துவதைத் தவிர்க்க உதவும். ஆங்கில ஊடகங்களின் செய்திகளின்படி, இரட்டைப் பங்களிப்பு மாநாடு எனப்படும் சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் பரந்த அளவிலான இந்திய ஏற்றுமதிக்கான வரிகளை குறைக்க அல்லது நீக்க, இந்திய சேவை நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை மேம்படுத்த மற்றும் வல்லுநர்கள் பிரிட்டனில் பணிபுரிவதை எளிதாக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

    Advertisement

    எண்ணெய் இறக்குமதி

    இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதி நாடாகும். சர்வதேச அளவுகோலான பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $120 வரை உயர்ந்ததால், அனைத்து நாடுகளும் அழுத்தங்களை சந்தித்தன. நேற்று ஒரே நாளில் எண்ணெய் விலை கிட்டத்தட்ட 10% உயர்ந்து பேரலுக்கு $85-ஐத் தொட்டது. ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு விலை உயர தொடங்கி உள்ளது.

    திடீரென மீண்டும் தாக்குதல்கள்

    ஏனெனில் ஈரான் மீது அமெரிக்கா தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியிருக்கிறது. இதற்குப் பதிலடியாக, ஈரான் படைகளும் ஐக்கிய அரபு அமீரகம் , கத்தார், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க நிலைகளை தாக்கி வருகிறது.

    Advertisement
    கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இருந்து மீண்டும் அரசு பேருந்துகள்? ஆம்னி பஸ்களுக்கு மட்டும் கிடைத்த நியாயம்

    எண்ணெய் கிடங்குகள் என்னாகும்

    சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்ட அறிவிப்பில், "இந்த ஆண்டின் இறுதியில் உலகளாவிய எண்ணெய் சந்தை மீண்டும் உபரி நிலைக்குத் திரும்பும் என்று கணிக்கப்பட்டாலும், இந்த முன்னறிவிப்பு ஹார்முஸ் நீரிணை வழியிலான கப்பல் போக்குவரத்து படிப்படியாக மீண்டு வரும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலானது. இது உற்பத்தியாளர்கள் மீண்டும் எண்ணெய் கிணறுகளைத் தொடங்கவும், மத்திய கிழக்கு மற்றும் பிற பகுதிகளில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் தயாரிப்புகளை அனுப்பவும் அனுமதிக்கும். இந்த வாரம் வளைகுடா பகுதியில் மீண்டும் ஏற்பட்ட துப்பாக்கிச் சூடுகள், நீடித்த அமைதி ஒப்பந்தத்தை எட்டாததன் அபாயங்களை எடுத்துக்காட்டுகிறது. எண்ணெய் சந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்ப அமைதி ஒப்பந்தம் மிகவும் அவசியமாகும்." இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Advertisement

    வர்த்தக பற்றாக்குறை எப்படி

    இது ஒருபுறம் எனில், 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ரூபாய் மதிப்பு சுமார் 11-12 சதவீதம் குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்தால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 100 ரூபாய் வரைக் கூட வீழ்ச்சியடையக்கூடும் என்று அந்நிய செலாவணி நிபுணர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

    கச்சா எண்ணெய் விலை உயர்வு

    ஃபின்ரெக்ஸ் டிரசரி அட்வைசர்ஸ் எல்எல்பி நிறுவனத்தின் கருவூலத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அனில் குமார் பன்சாலி கூறும் போது, "மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள புதிய புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணை வழியிலான எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட பிறகு எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. இந்தியா ஒரு முக்கிய எண்ணெய் இறக்குமதி நாடாக இருப்பதால், அதிக கச்சா எண்ணெய் விலை ரூபாயின் மதிப்புக்கு எதிர்மறையாகவே இருக்கும். புவிசார் அரசியல் நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்துக்களை நோக்கி நகர்ந்ததால், அமெரிக்க டாலருக்கான தேவை அதிகரித்துள்ளது. இது இந்திய ரூபாய் உட்பட பெரும்பாலான ஆசிய நாணயங்களின் மீது மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது." என்றார்.

    பங்குசந்தையும் பாதிப்பு

    அதேநேரம் இந்த போக்கு இந்திய பங்குச் சந்தைகளையும் விட்டுவைக்கவில்லை. இந்த ஆண்டில் இதுவரை நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகிய இரண்டுமே 7%-க்கும் மேல் சரிந்துள்ளன. இந்த நிச்சயமற்ற நிலை தொடர்ந்தால், அந்நிய நாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் மூலதன வெளியேற்றம் அதிகரிக்கவே அதிக வாய்ப்புள்ளது.

    இந்திய பொருளாதாரம் பாதிப்பு

    மொத்தமாக பார்த்தால் வெறும் 20 மைல் அகலமே கொண்ட ஹார்முஸ் நீரிணையில் ஏற்பட்ட சிக்கல்கள், தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்பது இந்தியாவைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலையை தாண்டி பல வகையில் பாதித்துள்ளது. ரூபாய் மதிப்பு மற்றும் பணவீக்கம் முதல் வர்த்தகம் மற்றும் பங்குச் சந்தை வரை எல்லாமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 20 மைல் அகல சிறிய நீர்வழியில் அடுதத என்ன நடக்கும் என்பது தான் அடுத்தடுத்த மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தையே தீர்மானிக்கக்கூடியதாக இருக்கும்.

    Topics: #iran #economy

    English Summary

    Let us examine in detail how the '20-mile ( Iran's Strait of Hormuz ) tension' affects India's trade deficit, the value of the rupee, crude oil, and the stock market.