கரூர் டிஎஸ்பி உட்பட தவெக மீது வழக்கு போட்ட 19 போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு மாற்றம்.. பின்னணி என்ன?


  • சென்னை: தற்போதைய தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்ற கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தின் போது பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துணை கண்காணிப்பாளர் உள்பட 19 போலீஸ் அதிகாரிகள் தற்போது அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் விஜய் பங்கேற்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இதில், ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி அப்பாவி பொதுமக்கள் 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை கரூர் காவல்துறையினர் விசாரித்து வந்த நிலையில், அப்போதைய திமுக தலைமையிலான அரசு சார்பில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

    Advertisement

    அந்த குழு நடத்திய விசாரணையில், தவெக தலைவர் விஜய் தாமதமாக வந்ததும், எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கூட்டம் சேர்ந்ததும் தான் கூட்டநெரிசல் விபத்துக்கு காரணம் என அறிக்கை சமர்பித்தது. இந்நிலையில், தவெக சார்பில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டுமென வலியுறுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் மேற்பார்வையில் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, பிற கட்சிகளின் ஆதரவுடன் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றார்.

    Advertisement

    தவெக ஆட்சி அமைந்தது முதல் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து, முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அந்த வகையில், கரூர் மாவட்டத்தில் காவல் துணை கண்காணிப்பாளர்கள் முதல் காவலர்கள் வரை பலரை பணியிட மாற்றம் செய்து காவல்துறை டிஜிபி மூலம் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, கரூரில் விஜய் பரப்புரை கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டட போலீஸ் அதிகாரிகள் கூண்டோடு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    கரூர் மாவட்டத்தில் மட்டும் மூன்று காவல் துணை கண்காணிப்பாளர்கள், 10 காவல் ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 19 காவல் துறையினர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, இதில் சில காவலர்கள் தெற்கு மண்டலத்திற்கும் வடக்கு மண்டலத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    கரூர் டவுன் துணை கண்காணிப்பாளராக இருந்த செல்வராஜ் தூத்துக்குடி மாவட்டத்திற்கும், குளித்தலை துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் கடலூர் மாவட்டத்திற்கும், கரூர் புறநகர் துணை கண்காணிப்பாளர் அப்துல் கபூர் தருமபுரி மாவட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

    அதேபோல், 10 காவல் ஆய்வாளர்கள் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர், தலைமை காவலர் என 5 பேர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    Advertisement

    மேலும், சிபிஐ கரூரில் 41 பேர் இறந்த சம்பவத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரையும் விசாரணை செய்தது. இந்த நிலையில் அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    முன்னதாக, கரூரில் விஜய் பங்கேற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த அஸ்ரா கார்க்கை, விஜய் தலைமையிலான அரசு உளவுத்துறை ஐ.ஜியாக நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் கரூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய ரவிக்குமார் மாற்றப்பட்டு முத்துக்குமரன் நியமிக்கப்பட்டார். கரூர் துயர சம்பவத்தின் போது ஆட்சியராக பணியுரிந்த தங்கவேல் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

    English Summary

    Nineteen police officers—including a DSPs who were on security duty during the crowd crush incident in Karur, attended by the current Chief Minister of Tamil Nadu, Joseph Vijay, have now been abruptly transferred.