சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாமல்லபுரம் இசிஆர் சாலையில் தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு போர்வெல் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தது. இந்த பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போர்வெல் குழாய் தாழ்வாக சென்ற மின்கம்பியின் மீது உரசியதாக சொல்லப்படுகிறது. இதில் பிரபு (22), பாலாஜி (32), பாட்ஷா (45), ராஜேந்திரன் (55) ஆகியோர் மின்சாரம் தாக்கி அதே இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து அறிந்த இறந்தவர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்தது.