எல்லா தப்பையும் நீங்கதான் பண்ணீங்க..எடப்பாடிக்கு எதிராக திரும்பிய MRV! கரூரில் பெரிய தலைக்கட்டாச்சே!

  • சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரும், கரூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்திருப்பது அதிமுக வட்டாரங்களில் குறிப்பாக கரூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அதிமுகவை சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்திருந்த நிலையில், தற்போது ஆறாவது எம்.எல்.ஏ.வாக எம்.ஆர்.விஜயபாஸ்கரும் விலகியிருப்பது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவுக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    Advertisement

    சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல்கள் இன்னும் முழுமையாக அடங்காத நிலையில், முன்னாள் அமைச்சர்கள் பலர் கட்சித் தலைமையுடன் அதிருப்தியில் இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வந்தன.

    Advertisement

    அந்த வரிசையில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் இந்த முடிவு கொங்கு வட்டாரத்தில் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
    எம்.ஆர்.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருடன் இணைந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    அதிமுக

    வரும் வியாழக்கிழமை நடைபெறவுள்ள இணைப்பு விழாவில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் இருவரும் அக்கட்சியில் இணையலாம் என்று கூறப்படுகிறது. இவர்களுடன் கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான அதிமுக நிர்வாகிகள், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்களும் தவெகவில் இணைவார்கள் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

    எம்.ஆர். விஜயபாஸ்கர்

    கடந்த சில வாரங்களாக அதிமுகவில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தவெகவை நோக்கி நகர்ந்து வரும் சூழலில், முன்னாள் அமைச்சரான எம்.ஆர்.விஜயபாஸ்கரின் விலகல் அரசியல் ரீதியாக அதிக கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக கரூர் மாவட்டத்தில் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக இந்த முடிவு நிச்சயம் அதிமுகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்கின்றனர்.

    Advertisement

    மாவட்டச் செயலாளர்

    இதற்கு பின்னணியில் அதிமுகவில் பதவி தொடர்பான அதிருப்தியே முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களின் போது மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகள் சில முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து பறிக்கப்பட்டன. பின்னர் சமரச முயற்சிகள் நடைபெற்றாலும், அனைவருக்கும் பழைய பொறுப்புகள் திரும்ப வழங்கப்படவில்லை.

    அந்த வகையில் கரூர் மாவட்டச் செயலாளர் பொறுப்பை மீண்டும் வழங்க வேண்டும் என்று எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்ந்து வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த கோரிக்கையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்றும், அதற்குப் பதிலாக வேறு பொறுப்புகள் மட்டுமே வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி எடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    Advertisement

    என்ன காரணம்?

    மாவட்டச் செயலாளர் பதவிதான் அதிமுகவில் உண்மையான அதிகாரம் கொண்ட பொறுப்பாகக் கருதப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகள் நியமனம், கட்சியின் களப்பணிகள், தேர்தல் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய அதிகாரங்கள் அந்தப் பதவியில்தான் உள்ளன. எனவே அந்தப் பொறுப்பை மீண்டும் பெற முடியாதது எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த அதிருப்தியே அவர் கட்சியில் இருந்து முழுமையாக விலகும் முடிவுக்கு காரணமாக இருந்ததாக அவரது ஆதரவாளர்க்ள் தெரிவிக்கின்றனர்.

    இசக்கி சுப்பையா

    ஏற்கனவே இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். தற்போது எம்.ஆர்.விஜயபாஸ்கரும் விலகியுள்ளதால், அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. இதன் காரணமாக திருச்சி கிழக்கு தொகுதியுடன் சேர்த்து மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.

    Advertisement

    தவெக

    இந்த இடைத்தேர்தலில் தவெக வலுவாக களம் இறங்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான முன்னேற்பாடுகள் வேகமெடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதிமுகவின் இன்னும் சில முக்கிய நிர்வாகிகளுடனும் தவெக தரப்பு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதனால் அடுத்த சில நாட்களிலும் அரசியல் கட்சி தாவல்கள் தொடர வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.

    English Summary

    Former AIADMK minister MR Vijayabaskar's resignation fuels fresh political buzz over possible TVK entry and Karur realignment.