பலே ஆளுங்க எடப்பாடி.. ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும்.. பெரும் கோபத்தில் மாஜிகள்?

  • சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு உள்கட்சி மோதலால் பரபரப்பை சந்தித்து வரும் அதிமுகவில், தற்போது மீண்டும் அதிருப்தி குரல்கள் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும், அவை அதிகாரம் இல்லாத பதவிகள் என்பதால் அவர்கள் அதிருப்தியில் இருப்பதாக அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது."ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும், பூசாத மாதிரியும் இருக்கணும்" என்பதைப் போல வேலுமணி ஆதரவாளர்களுகு 'டம்மி' பதவிகளை வழங்கியுள்ளார் எடப்பாடி என்கின்றனர்.

    Advertisement

    2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் கடும் உள்கட்சி பூசல் உருவானது. முன்னாள் அமைச்சர்களான சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் தலைமையிலான ஒரு தரப்பு, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது.

    Advertisement

    சட்டப்பேரவையிலும் தனி அணியாக செயல்பட்டதுடன், நம்பிக்கையில்லா ர்மானத்திலும் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தன. இதையடுத்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

    அதிமுக

    சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்களிடம் இருந்த மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள் பறிக்கப்பட்டன. அந்த இடங்களில் தனது ஆதரவாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதேநேரத்தில், தவெக அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சில முன்னாள் அமைச்சர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து அவர்கள் மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமாக செயல்படத் தொடங்கினர்.

    Advertisement

    உட்கட்சி மோதல்

    இதன் பின்னர் அவர்களை கட்சிக்குள் மீண்டும் ஏற்றுக்கொண்டாலும், முன்பு வகித்த முக்கிய பொறுப்புகள் உடனடியாக வழங்கப்படவில்லை. இந்த நிலையில், சுமார் ஒரு மாதத்திற்குப் பிறகு சில முன்னாள் அமைச்சர்களுக்கு புதிய பொறுப்புகள் அறிவிக்கப்பட்டன. எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, கருப்பணன், கே.பி. அன்பழகன், காமராஜ், பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்டோருக்கு அமைப்புச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

    மாவட்ட செயலாளர்

    ஆனால், இந்த நியமனங்கள் பலருக்கும் திருப்தி அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. காரணம், அதிமுக அமைப்பில் மாவட்டச் செயலாளர் பதவியே மிகுந்த அதிகாரம் கொண்டதாக கருதப்படுகிறது. மாவட்ட நிர்வாகிகள் நியமனம், கட்சி அமைப்பு விரிவாக்கம், போராட்டங்கள் நடத்துதல், தேர்தல் காலங்களில் வேட்பாளர் பரிந்துரை செய்வது உள்ளிட்ட பல முக்கிய அதிகாரங்கள் மாவட்டச் செயலாளர்களிடமே உள்ளன.

    Advertisement

    அமைப்புச் செயலாளர்

    மாறாக, அமைப்புச் செயலாளர் பதவி பெரும்பாலும் ஆலோசனை மற்றும் அமைப்பு சார்ந்த பணிகளுக்கான பொறுப்பாகவே பார்க்கப்படுகிறது. தற்போது அதிமுகவில் 60-க்கும் மேற்பட்டோர் அமைப்புச் செயலாளர்களாக உள்ளனர். கட்சியில் புதிதாக இணையும் முக்கிய பிரமுகர்களுக்கும் இந்தப் பதவி வழங்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதனால், இது அதிகாரம் கொண்ட நிர்வாகப் பதவியாக இல்லாமல், கவுரவப் பொறுப்பாகவே கருதப்படுகிறது.

    துணைப் பொதுச்செயலாளர்

    இதுபோல துணைப் பொதுச்செயலாளர் பதவியும் பெயரளவில் உயர்ந்த பதவியாக இருந்தாலும், கட்சியின் அன்றாட நிர்வாகத்தில் தனித்த அதிகாரம் கொண்ட பதவியாக இல்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கிய முடிவுகள் எடுப்பது, நிர்வாகிகளை நியமிப்பது அல்லது நீக்குவது உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் பொதுச்செயலாளர் வசமே இருப்பதால், புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டும் முன்னாள் அமைச்சர்கள் முழுமையான திருப்தியில் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    Advertisement

    முன்னாள் அமைச்சர்கள்

    இதனால், மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை இழந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீண்டும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விரைவில் முடிவு எடுக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    எடப்பாடி பழனிசாமி

    அதேநேரத்தில், தற்போதைய மாவட்டச் செயலாளர்களின் செயல்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், அவர்கள் எதிர்பார்த்த அளவில் செயல்படவில்லை என்றால் மாவட்டச் செயலாளர் பதவிகளில் மீண்டும் மாற்றம் செய்யப்படலாம் என்றும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது. அந்த சூழலில், தற்போது அமைப்புச் செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் பொறுப்பில் உள்ள முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.

    Advertisement

    மீண்டும் அதிருப்தி

    தேர்தல் தோல்விக்குப் பிறகு தொடர்ந்து உட்கட்சி சவால்களை சந்தித்து வரும் அதிமுகவில், மூத்த நிர்வாகிகளின் அதிருப்தி மீண்டும் வெடித்துள்ளதா? என்ற கேள்வி அதிமுக வட்டாரங்களில் எழுந்துள்ளது. இருப்பினும், இதுகுறித்து அதிமுகவினர் இதுகுறித்து வெளிப்படையாக பேசவில்லை. ஆனால், எடப்பாடி மீது நாளுக்கு நாள் அதிமுகவில் அதிருப்தி அதிகரித்து வருவது மட்டும் உண்மை என்கின்றனர்.

    English Summary

    Discontent grows within AIADMK as former ministers reportedly remain unhappy with honorary posts lacking organizational authority.