சென்னை: சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது என தூத்துக்குடியில் அண்ணாமலை பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது. இன்று அவருடைய பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் ஆதரவாளர்கள் ஆங்காங்கே போஸ்டர் ஒட்டி தங்களது ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் இருந்து விலகி உள்ளதாகவும், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அவர் விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் அரசியல் வட்டாரங்களில் நிலவி வருகிறது.
இந்த சூழலில், தூத்துக்குடி மாநகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில் ரமேஷ் கண்ணன் என்பவரின் பெயரில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன. அந்த போஸ்டர்களில், "பதவியால் உயர்ந்தவர் அல்ல... மக்களின் இதயத்தால் உயர்ந்தவர்", "அரசியலை மாற்ற வந்தவர் அல்ல... அரசியலின் அர்த்தத்தையே மாற்ற வந்தவர்", "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போன்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. அண்ணாமலையின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்த பரபரப்பான சூழ்நிலையில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது பல்வேறு அரசியல் யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களிலும் இந்த போஸ்டர்களின் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன. ஆனால் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகியதாக எனக்கு தகவல் ஏதும் வரவில்லை என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். "அண்ணாமலை பா.ஜ.க-விலிருந்து விலகுகிறாரா?" - நயினார் நாகேந்திரன் முற்றுப்புள்ளி! பிறந்தநாள் வாழ்த்து: "எனது அருமை சகோதரர் அண்ணாமலை ஆரோக்கியத்தோடும், மகிழ்ச்சியோடும் நீண்ட ஆயுள் வாழ இறைவனைப் பிரார்த்தித்து என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." ராஜினாமா கடிதம் வரவில்லை: "பா.ஜ.க மாநிலத் தலைவர் என்ற முறையில் அண்ணாமலையிடமிருந்து எனக்கு எந்தவொரு ராஜினாமா கடிதமும் வரவில்லை; இது குறித்து அவர் என்னிடம் பேசவும் இல்லை. சிறு விஷயத்தைப் பெரிதாக்குவது ஊடகங்கள்தான். தேர்தல் நேரத்தில் அவர் தனி ஹெலிகாப்டரில் சென்று எங்களுக்காகத் தீவிரப் பிரச்சாரம் செய்தார். எங்களுக்குள் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை." இரண்டு நாள் கெடு?: 'இரண்டு நாட்களில் பேசுவதாக அண்ணாமலை கூறியிருந்தாரே?' என்ற கேள்விக்கு, "அப்படியென்றால், அது குறித்து நீங்கள் அவரிடம்தான் கேட்க வேண்டும்" எனத் தெளிவாகப் பதிலளித்தார்.
இதனால், தூத்துக்குடி மாவட்ட அரசியல் களத்தில் புதிய விவாதம் எழுந்துள்ளதுடன், அண்ணாமலையின் எதிர்கால அரசியல் முடிவு குறித்து பொதுமக்களிடையேயும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பா.ஜ.க-விலிருந்து அண்ணாமலை விலகப் போவதாகவும், தனது பிறந்தநாளான இன்று அவர் புதிய அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் பரவி வரும் தகவல்களுக்கு நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்தார்.