டெல்லி: இந்தியாவை சேர்ந்த பிரபல நிதிநுட்ப நிறுவனமான கிரெட் (CRED) நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப் நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். குணால் ஷாவின் கிரெட் நிறுவனத்தில் வாட்ஸ் அப் நிறுவனம் இந்திய மதிப்பில் ரூ.8,550 கோடி முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி பின்டெக் நிறுவனமான கிரெட் (CRED) நிறுவனத்தின் நிறுவனர் குணால் ஷா, வாட்ஸ்அப்பின் புதிய சிஇஓவாக, தலைவராக நியமிக்கப்பட உள்ளார். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் உலக அளவில் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்புக்கு இந்திய தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த ஒருவர் நியமனம் பெற்றுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஏற்கனவே, கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியாவை சேர்ந்தவர்கள் உள்ள நிலையில் வாட்ஸ் அப்பின் சி இ ஓவாகவும் இந்தியர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 2019 முதல் வாட்ஸ்அப் நிறுவனத்தை நிர்வகித்து வந்த வில் காத்கார்டுக்கு பதிலாக குணால் ஷா பொறுப்பேற்கவுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் 300 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்அப், மெசேஜ் அனுப்பும் செயலியாக மட்டுமின்றி பணப் பரிவர்த்தனை, வணிகத் தொடர்பு சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு என தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளது. மக்கள் அன்றாட வாழ்க்கையில் வாட்ஸ்அப்பை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பது குறித்த ஆழமான புரிதல் குணால் ஷாவுக்கு இருப்பதுடன், நிறுவனத்திற்கு வெளியிலிருந்து வரும் புதிய பார்வையும் அவர் கொண்டிருப்பதாக மெட்டா தெரிவித்துள்ளது. வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இந்தியாவில் மட்டும் 54 கோடி பேர் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகிறார்கள். வணிக சேவைகள் மற்றும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் முக்கிய மையமாக வாட்ஸ் அப் உருவெடுத்துள்ள நிலையில், எதிர்கால வளர்ச்சியில் இந்த இரண்டு துறைகளும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில்தான், தலைமை பொறுப்பில் முக்கிய மாற்றத்தை வாட்ஸ் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சூகர்பெர்க் இது பற்றி கூறியதாவது:- "குணால் ஷா மெட்டா நிறுவனத்தில் இணைந்து வாட்ஸ்அப்பின் அடுத்த தலைவராக பொறுப்பேற்கிறார். இந்தியாவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக கிரெட்டை உருவாக்கியவர் குணால் ஷா. உலகின் மிகப்பெரிய மெசேஜிங் செயலியை வழிநடத்த தேவையான உருவாக்கும் திறனும், உலகளாவிய பார்வையும் அவரிடம் உள்ளது. கோடிக்கணக்கான மக்களுக்கும், லட்சக்கணக்கான வணிகங்களுக்கும் வாட்ஸ்அப்பை சிறந்த சேவையாக தொடர்ந்து மேம்படுத்த அவருடன் பணியாற்ற ஆவலாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் குணால் ஷா. குஜராத்தை சேர்ந்த நடுத்தர வர்க்க குடும்பத்தில் குணால் ஷா பிறந்தார். அவரது தந்தை பாராமெடிக்கல் விநியோக தொழிலை நடத்தி வந்தார். மும்பையில் உள்ள வில்சன் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார் குணால் ஷா. மேலும், அவர் நர்சீ மோன்ஜீ மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் எம்பிஏவும் படித்துள்ளார். 2018-ஆம் ஆண்டு 10 லட்சம் அமெரிக்க டாலருடன் கிரெட்டை (CRED) நிறுவனத்தை குணால் ஷா தொடங்கினார். கிரெடிட் கார்டு பில்களை நேரத்தில் செலுத்தும் பயனர்களுக்கு வெகுமதி வழங்கும் நோக்கில் இந்த நிறுவனத்தை உருவாக்கினார். பின்னர், கிரெட் நிறுவனம் வேகமாக வளர்ச்சி பெற்று 1.7 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை பெற்றது. மேலும், பணப் பரிவர்த்தனை, கடன் சேவைகள், காப்பீடு, இ-காமர்ஸ், சொத்து மேலாண்மை மற்றும் கிரெடிட் கார்டு சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தியது.வாட்ஸ் அப் சி.இ.ஓவாக நியமனம்
உலகளாவிய பார்வை உள்ளது
யார் இந்த குணால் ஷா?