மத்திய அரசு கிட்ட.. முதல்வர் விஜய் கறாராக பேசனும்! திருமாவளவன் வைத்த முக்கிய டிமாண்ட்!


  • சென்னை: வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாடப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியிருக்கிறது. இந்நிலையில், இந்த விஷயத்தில் முதலமைச்சர் விஜய் கறாராக மத்திய அரசிடம் பேச வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியிருக்கிறார்.

    Advertisement

    இது குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், "'வந்தே மாதரம்'- பாடலை அரசு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பாட வேண்டுமென்று இந்திய ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில தலைமைச் செயலாளர்களுக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. ( No. 14/2/2025-Publie; Government of India Dt 09.07.2026). எந்தெந்த நிகழ்ச்சிகளில் அதனைப் பாடவேண்டும் என்ற பட்டியலையும் கொடுத்துள்ளது.

    Advertisement

    உரிய முறையில் தெரிவிக்க வேண்டும்

    உள்துறை அமைச்சகத்தின் இந்தச் சுற்றறிக்கை இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு ஆபத்தானது மட்டுமல்ல; மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடுவதுமாகும். எனவே, இந்த சுற்றறிக்கையை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். அத்துடன், 'வந்தே மாதரம்' பாடலைக் கட்டாயம் பாட வேண்டும் என்பதைத் தமிழ்நாடு அரசு ஏற்காது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசிடம் உரிய முறையில் தெரிவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம்.

    ஆர் எஸ் எஸ் அமைப்பின் தூண்டுதல்

    இந்தியாவின் தேசிய கீதமாக 'ஜன கண மன' பாடல் இருப்பதா? 'வந்தே மாதரம்' பாடல் இருப்பதா? என்ற விவாதம் இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலேயே எழுப்பப்பட்டது. விரிவான வாதங்களுக்குப் பிறகே, 'ஜன கண மன' என்னும் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக தேர்வு செய்யப்பட்டது. கடந்த 75 ஆண்டுகளாக அதுவே பாடப்பட்டு வருகிறது. இப்போது பாஜக அரசு, ஆர் எஸ் எஸ் அமைப்பின் தூண்டுதலால் 'வந்தே மாதரம்' பாடலை இந்தியாவின் தேசிய கீதமாக மாற்றுவதற்கு முயற்சி செய்கிறது.

    Advertisement

    ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகளில் மட்டும் அதனைப் பாடினால் போதும் என்று தொடக்கத்தில் சொன்னார்கள். இப்போதோ 'தேசிய கீதம்' பாடுவதற்கு முன்பு 'தேசிய பாடலென்று' "வந்தே மாதர"த்தைப் பாட வேண்டும் என ஒன்றிய அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.

    முஸ்லிம் லீக்

    1870-களில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயரால் எழுதப்பட்டு, 1882-ல் வெளியான அவரது 'ஆனந்தமடம்' (Anandamath) நாவலின் மூலம் பிரபலமடைந்த இப்பாடலை தேசிய கீதம் ஆக்கவேண்டும் என்ற கருத்துக்கு சுதந்திரத்துக்கு முன்பேயே அனைத்துத் தரப்பினரின் ஆதரவு கிடைக்கவில்லை. இந்தப் பாடலின் முதல் இரண்டு பத்திகளுக்குப் பிறகு இந்துக் கடவுள்களைப்பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன. இதனை முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சார்ந்தோர் பாடினால் அது அவர்களது வழிபாட்டுக் கொள்கைக்கு எதிராகப் போய்விடும். எனவே, முஸ்லிம் லீக் போன்ற சில அமைப்புகள் அதனை எதிர்த்ததன.

    Advertisement

    ஜவஹர்லால் நேரு

    இந்தப் பிரச்சினையால் நாட்டின் விடுதலை போராட்டம் பின்னடைவைச் சந்திக்கிறது என்பதை உணர்ந்த ஜவஹர்லால் நேரு , சுபாஷ் சந்திர போஸ் முதலான காங்கிரஸ் தலைவர்கள் 1937-ல் ஒரு சமரசத்தை ஏற்படுத்தினர். இந்தியர்களிடையே ஒற்றுமையைப் பேணுவதற்காக, இந்தப் பாடலில் இடம்பெற்றுள்ள வெளிப்படையான இந்துமதம் சார்ந்த குறிப்புகளைத் தவிர்த்து, காங்கிரஸ் பொதுக் கூட்டங்களில் முதல் இரண்டு பத்திகளை மட்டும் பாடுமாறு அவர்கள் பரிந்துரைத்தனர்.

    தேசிய கீதம்

    1950 இல் அரசியல் நிர்ணய சபையிலும்கூட இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டது. 'ஜன கண மன' பாடலைப் பாடுவதற்குப் பதிலாக, 'வந்தே மாதரம்' பாடவேண்டும் எனக் கூறப்பட்டது. ஆனால், ரவீந்திரந்தா தாகூர் எழுதிய 'ஜன கண மன' என்னும் பாடலே தேசியகீதம் என முடிவு செய்யப்பட்டது.

    Advertisement

    வந்தே மாதரம் பாடலின் 150 ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டதிலிருந்து அதனை தேசிய கீதமாக அறிவித்துவிட வேண்டும் என பாஜக அரசு துடிக்கிறது. அதற்காகவே பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்த சுற்றறிக்கையை மாநில அரசுகளுக்கு அனுப்பியுள்ளது.

    மதவாத அரசியல்

    மதச்சார்பின்மைக்கு மாறான - ஒரு குறிப்பிட்ட மதசார்புள்ள பாடலான வந்தே மாதரம் பாடலை அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதைக் கட்டாயமாக்கும் சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டுமென்றும்; ஒன்றிய பாஜக அரசின் இந்த மதவாத அரசியல் செயல்திட்டத்தைத் தமிழ்நாடு அரசும் ஏற்கக்கூடாது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்." என குறிப்பிட்டிருக்கிறார்.

    English Summary

    Thirumavalavan: The Central Government has insisted that the 'Vande Mataram' song must be sung at government functions. Against this backdrop, Thirumavalavan, leader of the Viduthalai Chiruthaigal Katchi (VCK), has urged Chief Minister Vijay to take a firm stand with the Central Government on this matter.