சென்னை: தமிழ் சினிமாவுக்கு இது மிகவும் சோகமான மாதம். மூத்த இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் திரையுலகினர் சோகத்தில் உள்ளனர். பாக்யராஜ் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். திரைக்கதை ஜாம்பவன் என்றழைக்கப்படும் பாக்யராஜின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய முதல் பட பூஜைக்கு எந்த விஐபியும் வராத நிலையில், பாக்யராஜ் கலந்து கொண்டு வாழ்த்தியதை இயக்குநர் விக்ரமன் நினைவு கூர்ந்துள்ளார்.
இயக்குநர் விக்ரமன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், "கடந்த சில வருடங்களாக தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்த பலர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இயக்குநர் இமயம் பாரதிராஜா உயிரிழந்த சில வாரங்களிலேயே அவரின் சீடன் பாக்யராஜ் உயிரிழந்துள்ளார். இந்தியா முழுவதுமே திரைக்கதைக்கு புகழ் பெற்றவர் பாக்யராஜ். அவரை போல யாராலும் திரைக்கதை வடிவமைக்க முடியாது. அவரின் மரணம் பேரதிர்ச்சி.
தென்னிந்திய திரை எழுத்தாளர் சங்க பொதுக்குழுவில் பாக்யராஜ் சாரின் பணிகளை நான் பாராட்டி பேசி வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. அதை பார்த்து பாக்யராஜ் சாரும் மகிழ்ச்சியடைந்தார். அதற்குள் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறோம் என்று தெரியவில்லை. பார்த்திபன் சார், பாக்யராஜ் சாரின் அசோசியேட் இயக்குநராக இருந்தார். நான் பார்த்திபன் சாருக்கு அசோசியேட் இயக்குநராக இருந்தேன். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும். என்னுடைய முதல் படம் புது வசந்தம் தொடக்க விழாவுக்கு பல விஐபிகளுக்கு பத்திரிகை வைத்து அழைத்தேன். எல்லா விஐபிகளையும் நானே நேரடியாக சென்று பூஜைக்கு அழைத்தேன். யாருமே வரவில்லை. பூஜைக்கு வந்த ஒரே விஐபி பாக்யராஜ் சார் மட்டும் தான். அன்றைய தினம் அவருக்கு ஒரு படப்பிடிப்பு இருந்தது. அப்படியும் கூட பூஜையில் கலந்துவிட்டு சென்றார். அதன்பிறகு நான் எடுத்த அனைத்து பட நிகழ்வுகளிலும் அவர் கலந்து கொண்டார். கடைசியான நான் எடுத்த படத்தின் ஆடியோ வெளியிடு, சிறப்பு காட்சி திரையிடலில் அவர் கலந்து கொண்டார். அந்தப் படத்தின் இறுதியில் அவர் நடிக்கவும் செய்தார். 2000 காலகட்டத்தில் அவரின் வீட்டிற்கு சென்று கதைகள் பற்றி ஆலோசித்துள்ளோம். அவர் சிறந்த குடும்ப தலைவராக இருப்பதால் தான் அவரின் படங்களில் குடும்பம் சம்பந்தப்பட்ட கதைகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். மனித உணர்வுகள், கலாச்சாரத்திற்கு மிகுந்த மதிப்பளிக்க கூடியவர் நான் திரைத்துறைக்கு வந்து 43 வருடங்களாகிவிட்டன. இந்த 43 வருடங்களில் ஒரே மாதத்தில் 2 ஜாம்பவான்கள் ஒரே மாதத்தில் உயிரிழப்பது இதுதான் முதல்முறை. இந்திய சினிமாவையே தமிழ் சினிமா பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். குரு, சிஷ்யன் இருவருமே அடுத்தடுத்து ஒரே மாதத்தில் இறந்திருப்பது, அவர்களின் துரோணாச்சாரியர்களாக ஏற்று கொண்ட ஏகலைவர்களுக்கு இது பெரும் இழப்பு" என்றார்.பாக்யராஜ் மறைவு
ஒரே விஐபி