சென்னை: பழனி கோயில் மலை அடிவாரத்தில் ரூ 100 கோடி நில மோசடியில் பினாமி பெயரில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது என திமுக சட்டத் துறை இணைச் செயலாளர் பரந்தாமன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் பழனியில் ரூ 100 கோடி நிலமோசடியில் பினாமி பெயரில் பணபரிமாற்றம் நடந்துள்ளது.
ரூ 100 கோடி நில மோசடி வழக்கில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க அமைச்சர்கள் முயற்சி செய்கிறார்கள். இந்த ரூ 100 கோடி மோசடியில் பத்திரப்பதிவில் சதி வலையில் இருந்தவர்கள் யார் யார்? கோயில் நிலத்தை முறைகேடாக பத்திரப்பதிவு செய்ய முடியாது என சார்பதிவாளர் பாலகிருஷ்ணன் விடுப்பில் சென்றுவிட்டார். அவருக்கு பதில் சத்திரபட்டி, கீரனூரில் உள்ள சார்பதிவாளர்களை பழனி அலுவலகத்தில் டூட்டிக்கு அழைக்காமல் 60 கி.மீ. தூரத்தில் கொடைக்கானலில் இருந்து சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை அழைத்தது ஏன்? பழனி நில முறைகேடு தொர்பாக அமைச்சர்கள் ரமேஷ், லோகேஷ் இடையே முரண்பட்ட கருத்துகள் உள்ளன. அது போல் அமைச்சர்கள் இருவரும் ஒவ்வொரு கருத்தை சொன்னால் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர் மாற்றுக் கருத்தை சொல்கிறார். ஒரே ஒரு நாள் டூட்டிக்கு வந்த சார் பதிவாளர் ஜஸ்டின் அவசர அவசரமாக ரூ 100 கோடி பத்திரப்பதிவை செய்தது ஏன்? அந்த சார்பதிவாளர் ஜஸ்டின் பத்திரப்பதிவுக்கான அலுவலர் இல்லை என்கிறார்கள். கோயில் நிலம் என தெரியாமல் பத்திரப்பதிவு செய்துவிட்டதாக அமைச்சர் கூறுகிறார், பொதுவாக கோயில் நிலம், அரசாங்க நிலம் என பட்டியல் பத்திரப்பதிவு அலுவலகத்தில் இருக்கும். இதை வைத்துதான் பத்திரப்பதிவுகள் நடக்கும். ஒருவர் பதிவு செய்யும் நிலம் கோயில் நிலம், அரசாங்க நிலம் இல்லையா என்பதை சரிபார்த்துதான் செய்வார்கள். இந்த கோயில் நிலத்தை 2 கோடிக்கு வாங்கியதாக சொல்லப்படும் சேதுபதி, வெள்ளத்துரை ஆகியோரின் பொருளாதார நிலவரத்தை சரிபார்த்துவிட்டோம். அவர்களால் கோடிக்கணக்கில் பணம் புரட்ட முடியாத நிலையில் உள்ளனர். அப்படியிருக்கும் போது எங்கிருந்து 2 கோடி ரூபாய்க்கு பணத்தை புரட்ட முடியும்? இந்த போலி பத்திரப்பதிவின் சதியில் இருப்பவர்கள் யார் யார்? என பரந்தாமன் கேள்வி எழுப்பியுள்ளார்.