சென்னை: சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்தும் பரபரப்பு ஓய்ந்தபாடில்லை. தேர்தலுக்கு பிறகு திமுக கூட்டணி உடைந்துள்ளது. காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கம்யூனிஸ்ட் கட்சிகளும் தவெகவுக்கு ஆதரவளித்துள்ளன. தவெக ஆட்சியமைப்பதை தடுப்பதற்காக, திமுக - அதிமுக கூட்டணி சேர முயற்சிகளும் நடந்தன. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கும் திமுகவின் முயற்சி செய்ததாகவும், அதில் தங்களுக்கு உடன்பாடில்லை என காதர் மொகிதின் கூறியுள்ளார்.
ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "திமுக தலைவர் ஸ்டாலின் தான், ஆளுநர் தவெக ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என அறிக்கை விட்டார். அதை வரவேற்று நாங்களும் அறிக்கை விட்டோம். அரசியலில் நிலவிய குழப்பங்கள் தொடர்பாக ஸ்டாலினிடம் நேரடியாக சென்று பேசினோம். அங்கு அவர்கள் வேறு விதமான யோசனையில் இருந்ததாக சொல்லப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக திமுக ஆதரவளிப்பது போன்ற கருத்து சொல்லப்பட்டது. இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே எனக்கு புரியவில்லை. ஏதோ சொல்கிறார்கள் என கிளம்பிவந்து எங்கள் கட்சியில் ஆலோசனைன நடத்தினோம். கேரளாவில் இருந்து எங்கள் தலைவர்கள் எல்லாம் ஆதரவு கொடுங்கள் ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள் என கேட்டனர். தவெகவினரும் எங்கள் அலுவலகம் வந்து ஆதரவு கேட்டார்கள். இப்போதுள்ள 7-8 மந்திரிகளே வந்து அழுத்தம் கொடுத்தனர். நாங்கள் திமுக கூட்டணியில் இருக்கிறோம், நீங்கள் எங்களிடம் பேசுவதற்கு நேரடியாக ஸ்டாலினிடம் பேசிவிட்டு வரலாமே என்று சொன்னோம். விஜயே நேரடியாக ஆதரவு கேட்டு வருகிறார்கள் என்றனர். நாங்கள் அதெல்லாம் வேண்டாம் என வெளியே கிளம்பிவிட்டோம். பிறகு நாங்கள் அறிவாலயம் சென்றோம். திமுக தலைமையிடம் இதைப்பற்றி கேட்டபோது, திருமாவளவனை முதல்வராக்கும் ஆலோசனையில் இருப்பதாக கூறினார்கள். அவர் எம்எல்ஏவே இல்லையே என நான் கேட்டேன். அடுத்த 6 மாதங்களில் ஆக்கிவிடலாம் என்று சொன்னார்கள். இந்த யோசனையில் எனக்கு உடன்பாடு இல்லை. இரண்டு முயற்சிகளிலும் எங்களுக்கு உடன்பாடில்லை. மக்கள் வாக்களித்ததற்கு மாற்றாக யோசிப்பது சரியாகாது. எங்களுக்கு ஆட்சியமைக்க விருப்பமில்லை என்று விஜய் கூறியிருந்தால், இவர்கள் முயற்சி செய்வது நியாயமாக இருந்திருக்கும். அது நடைபெறாமல் யோசிப்பது ஜனநாயக விரோதமானது" என்றார்.திமுக திட்டம் என்ன
ஜனநாயக விரோதம்