ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ்


  • சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ சமீபத்தில் தெரிவித்த ஒரு கருத்து, திமுக கூட்டணி அரசியலில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. "கடந்த தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால், தற்போது தவெக அரசுக்கு ஆதரவு அளிக்க முடியாத நிலை ஏற்பட்டது" என்ற ரீதியிலான அவரது கருத்து, திமுக வட்டாரங்களில் கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

    Advertisement

    ஏற்கனவே, முதல்வர் விஜய் வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பல்வேறு யூகங்களை கிளப்பியிருந்தது. அந்த சந்திப்பின் போது வைகோ அளித்த வரவேற்பும், அவரை வழியனுப்பிய விதமும் திமுக நிர்வாகிகளிடம் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.

    Advertisement

    அப்போதே மதிமுகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து திமுக தரப்பில் சந்தேகங்கள் எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தற்போது துரை வைகோவின் கருத்துக்கு பதிலடி அளிக்கும் வகையில் திமுக மூத்த நிர்வாகிகள் பலர் தனிப்பட்ட முறையில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    திமுக

    திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறுகையில், "2024 மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியை மதிமுகவுக்கு பெற்று கொடுத்தது திமுக தலைமையே. அப்போது கூட்டணி பேச்சுவார்த்தையில் பல்வேறு சிக்கல்கள் இருந்தபோதும், மதிமுகவுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட்டது. வெற்றிக்காக திமுக நிர்வாகிகள் முழு ஆற்றலுடன் களத்தில் பணியாற்றினர். இன்று அதையே மறந்து பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது" என தெரிவித்துள்ளார்.

    Advertisement

    மதிமுக

    மேலும், " உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது துரதிருஷ்டம் என்றால், அந்த சின்னத்தின் மூலம் கிடைத்த வெற்றியை என்னவென்று சொல்வது?" என்ற கேள்வியையும் திமுகவினர் எழுப்பி வருகின்றனர். திமுக மற்றும் மதிமுக இடையேயான உறவு பல ஏற்றத் தாழ்வுகளை கடந்துள்ளது. ஒருகாலத்தில் திமுகவிலிருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கிய வைகோ, பின்னர் அரசியல் சூழ்நிலைகளால் மீண்டும் திமுக கூட்டணியில் இணைந்தார்.

    வைகோ

    அந்த காலகட்டத்தில், "எந்த நிபந்தனையும் இல்லாமல் வருகிறோம்" என்று வைகோ கூறியதாக திமுக வட்டாரங்கள் நினைவுபடுத்துகின்றன. அதேபோல், மதிமுக நிர்வாகிகள் பலர் திமுகவில் இணைய முயன்றபோதும், வைகோ மனம் வருந்தக்கூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை திமுக தலைமை தவிர்த்ததாகவும் கூறப்படுகிறது. முதல்வர் விஜய்யுடன் வைகோ சந்திப்பு நடத்தியதிலிருந்து, மதிமுக எதிர்காலத்தில் தவெகவுடன் நெருக்கமாக செயல்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்து வருகிறது.

    Advertisement

    துரை வைகோ

    தற்போது திமுக ஆட்சியில் இல்லாத சூழலில், எதிர்க்கட்சி அரசியலில் புதிய கூட்டணிகள் உருவாகும் வாய்ப்பு இருப்பதாக பலரும் கருதுகின்றனர். அதற்கான முன்னோட்டமாகவே வைகோ மற்றும் துரை வைகோவின் சமீபத்திய அரசியல் நிலைப்பாடுகள் பார்க்கப்படுகின்றன. ஆனால், இதுகுறித்து மதிமுக தரப்பில் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. மதிமுக பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், கட்சியின் அடுத்த அரசியல் முடிவு என்ன என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கூட்டணியில் தொடர்வதா, தவெகவுடன் நெருங்குவதா என்பது குறித்து அப்போது தெளிவான சிக்னல் கிடைக்கலாம் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

    Advertisement

    மதிமுகவின் வளர்ச்சி

    திமுக நிர்வாகிகள் சிலர் கூறுவதாவது, "அரசியலில் கூட்டணிகள் மாறலாம். ஆனால் கடந்த காலத்தில் கிடைத்த ஆதரவையும், அரசியல் வாய்ப்புகளையும் மறந்துவிடக் கூடாது. மதிமுகவின் வளர்ச்சிக்கும், அதன் தலைவர்களின் அரசியல் பயணத்திற்கும் திமுக முக்கிய பங்கு வகித்துள்ளது. அதனை மறுக்கும் வகையிலான கருத்துகள் கூட்டணி கட்சிகளிடையே தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்" என தெரிவித்துள்ளனர்.

    திமுக - மதிமுக

    இதற்கிடையே, துரை வைகோவின் "துரதிருஷ்டவசமாக சூரியன் சின்னத்தில் போட்டியிட்டோம்" என்ற கருத்து, திமுக - மதிமுக உறவில் புதிய விரிசலை ஏற்படுத்தியுள்ளது உண்மை தான் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. தற்போதைக்கு, இந்த விவகாரம் திமுக முகாமில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள நிலையில், மதிமுக எஸ்கேப்பாவது உறுதி தான் என்றும் சொல்கின்றன.

    English Summary

    Durai Vaiko’s comments on contesting under the Rising Sun symbol spark unease and fresh debate within the DMK alliance.