சென்னை: தமிழக மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களின் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தால் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, மின்வாரிய அதிகாரிகள் நாளை முதல் தலைமையகத்தில் ஆஜராக வேண்டும் என்று கண்காணிப்பு, செயல் பொறியாளர்களுக்கு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சூழ்நிலை தவிர ஊழியர்களின் விடுப்பு ரத்து செய்யப்பட்டு, தடையற்ற மின் உற்பத்தியை உறுதி செய்யுமாறு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது நீண்டகாலக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.. இதனால் மாநிலத்தின் மின் விநியோகக் கட்டமைப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கோடைக்கால மின் தேவைகள் உச்சத்திலுள்ளபோது, பொதுமக்களின் அத்தியாவசிய தேவையை இந்த போராட்டம் பாதிக்குமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ளும் வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம் அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்கள் மற்றும் செயல் பொறியாளர்கள் நாளை முதல் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தலைமையக அலுவலகங்களில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. அவசர மற்றும் தவிர்க்க முடியாத சூழ்நிலைகளைத் தவிர, வாரியப் பணியாளர்கள் யாருக்கும் எந்தவிதமான விடுப்பும் வழங்கப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விடுப்பில் சென்ற ஊழியர்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றும், விடுப்பு விண்ணப்பங்கள் அனைத்தும் நிராகரிக்கப்படுவதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் பிரதான நுழைவாயில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு, தீவிரக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. குறிப்பாக, ஒப்பந்தத் தொழிலாளர்கள் ஆலை வளாகத்திற்குள் நுழைவதற்கும், அங்கே கூடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மின் உற்பத்தியை தடையின்றி தொடர்வதை உறுதி செய்யவும், விநியோகத்தில் தொய்வு எதுவும் ஏற்படாமல் இருக்கவும் ஆலையை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என அனைத்துப் பணியாளர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் இந்த அதிரடி உத்தரவானது பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது. காரணம், கடந்த சில நாட்களாகவே மின்வாரியத்தில் பல்வேறு மாற்றங்கள் மற்றும் டிரான்ஸ்பர் குழப்பங்கள் உள்ளன.. இதற்கு நடுவில் வேலைநிறுத்தப் போராட்டமும் நிர்வாகத்திற்கு பெரும் தலைவலியாக மாறியது.. ஏற்கனவே மின்வாரியம் கடன் சுமையில் தவித்துவரும்போது, இந்த போராட்டம் சவாலாக உருவெடுத்தது. இப்படிப்பட்ட சூழலில்தான், மின்சாரத்துறை வளாகங்கள் அனைத்தும் தற்போது கூடுதல் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. எனினும், அரசு மற்றும் போராட்டக் குழுவினரிடையே சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெறாத பட்சத்தில், நிலைமை இன்னும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.சென்னை பீச் தாம்பரம் ரூட்டில் மின்சார ரயில் சேவை திடீர் பாதிப்பு.. பீக் நேரத்தில் திண்டாடிய பயணிகள்
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நாளை மின்சார ரயில்கள் ரத்து.. 8 ரயில்களின் விவரம்