இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா?


  • சென்னை:அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில், அதுவும் ஒரு துக்க வீடே போர்க்களமாக மாறியிருக்கும் சம்பவம் ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் உலுக்கியெடுத்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை, சொந்தக் கட்சித் தொண்டரே 'துரோகி' என ஒருமையில் முழக்கமிட்டு சாடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. எடப்பாடி பழனிசாமி மற்றும் வேலுமணி ஆதரவாளர்கள் துக்க வீட்டிலேயே ஒருவரையொருவர் அடித்துக் கொண்ட சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

    Advertisement

    அதிமுக முன்னாள் அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள் கடந்த மே 15ம் தேதி காலமானார். அவரது மறைவையொட்டி, பொள்ளாச்சி திப்பம்பட்டியில் உள்ள ஜெயராமனின் இல்லத்தில் நேற்று இரங்கல் நிகழ்வு நடைபெற்றது.

    Advertisement

    எடப்பாடி பழனிசாமி

    மரணமடைந்த தாயாருக்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், பொள்ளாச்சி ஜெயராமன் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் அதிமுகவின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் அங்கு திரண்டிருந்தனர்.

    இந்த துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகை தருவதாக இருந்தது. அவர் வருவதற்கு முன்பாகவே, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், கந்தசாமி ஆகியோருடன் பொள்ளாச்சி ஜெயராமனின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தார்.

    வேலுமணிக்கு எதிராக கோஷம்

    வளாகத்திற்குள் நுழைந்த எஸ்.பி. வேலுமணி, மறைந்த சரஸ்வதி அம்மாளின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு வெளியே வந்தார். அப்போதுதான் வளாகத்தில் திரண்டிருந்த அதிமுக தொண்டர்கள் கூட்டத்தில் இருந்து திடீரென ஆவேசமாக முன்னோக்கி வந்த ஒரு தொண்டர், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை நேருக்கு நேர் பார்த்து, "துரோகி வேலுமணி ஒழிக... துரோகிங்க அண்ணா இவங்க எல்லாம்!" என்று மிகக் கடுமையான தொனியில், ஒருமையில் கத்தி கூச்சலிடத் தொடங்கினார்.

    Advertisement

    துக்க வீட்டில், அதுவும் சொந்தக் கட்சியின் மிக முக்கிய தலைவருக்கு எதிராக தொண்டர் ஒருவரே பகிரங்கமாக இப்படி முழக்கமிட்டதால் அங்கிருந்த ஒட்டுமொத்த கூட்டமும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்துபோனது. எதிர்பாராத இந்த தாக்குதலால் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கடும் அதிர்ச்சியடைந்தார்.

    உடனடியாக நிலைமையை உணர்ந்த பொள்ளாச்சி ஜெயராமனின் ஆதரவாளர்கள், துக்க வீட்டில் இதுபோன்று பேசக் கூடாது என அந்தத் தொண்டரைத் தீவிரமாகக் கடிந்து கொண்டு, அங்கிருந்து அவரை வெளியேற்ற முயன்றனர்.

    துரோகி வேலுமணி ஒழிக

    ஆனால் இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த எஸ்.பி. வேலுமணியின் ஆதரவாளர்களும் மற்ற அதிமுக நிர்வாகிகளும் அந்த நபரை நோக்கி பாய்ந்து சரமாரியாக தாக்க முயன்றனர். இதனைப் பார்த்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும் உள்ளே புகுந்தனர். அடுத்த சில நிமிடங்களில், எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகிய இருவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, அது பின்னர் பயங்கர கைகலப்பாக மாறியது.

    Advertisement

    2 தரப்பு தொண்டர்களும் ஒருவரையொருவர் முட்டி மோதி தாக்கிக் கொண்டதால், அமைதியாக இருந்த அந்த துக்க வீடு, சிறிது நேரம் கடும் பதற்றமும் சலசலப்பும் நிறைந்த நிஜமான போர்க்களமாக மாறியது. பிறகு அங்கிருந்த பிற தொண்டர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு, இருதரப்பையும் விலக்கி நிலைமையை மிகவும் சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    அதிமுக உட்கட்சி பூசல்

    கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் சிலர், தவெக அரசுக்கு ஆதரவு அளித்ததாக ஒரு விவகாரம் வெடித்தது. இதனால் அதிமுகவுக்குள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள், வேலுமணி ஆதரவாளர்கள் என இரு பிரிவுகளாகப் பிளவு ஏற்பட்டு நிலவிய உட்கட்சிப் பூசலே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாக வெடித்துள்ளது.

    Advertisement

    கடந்த சில தினங்களுக்கு முன்புதான் அதிமுகவின் இந்த 2 பிரிவுகளும் மீண்டும் ஒன்று சேர்ந்தன. மேலிட தலைவர்கள் சேர்ந்து கொண்டார்களே தவிர, அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் நிலவிய அந்த ஆத்திரம் இன்னும் தணியவில்லை போலும். அதன் வெளிப்பாடாகதான் இந்த சம்பவம் அமைந்துள்ளது.

    சொந்த கட்சித் தலைவருக்கு எதிராகப் பகிரங்கமாக முழக்கமிட்ட அந்த தொண்டர் யார், அவருக்குப் பின்னணியில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு தலைவர்கள் ஏதேனும் இருக்கிறார்களா என்பது குறித்து அதிமுக தலைமை இப்போது ரகசிய விசாரணையை தொடங்கியுள்ளதாம். எனினும். துக்க வீட்டில் அரங்கேறிய இந்த கோஷ்டி மோதல் கொங்கு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English Summary

    Even Before EPS Arrives, This Happened! Man Shouts ‘Traitor’ at SP Velumani Face-to-Face, Triggering a Stir