தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்!


  • சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தவெக வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. தவெக அரசின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜூன் 18 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்க உள்ளதாக சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவித்துள்ளார்.

    Advertisement

    நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், 108 தொகுதிகளில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல் கட்சிகளின் ஆதரவுடன், கடந்த மே 10 ஆம் தேதி முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றார். முதல்வர் விஜய்யுடன் சேர்த்து, அமைச்சரவையில் மொத்தம், 35 பேர் உள்ளனர்.

    Advertisement

    விஜய் கேபினட் கூட்டம்

    இந்நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான முதல் அமைச்சரவை கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை, நடந்தது. இந்த கேபினட் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

    இந்நிலையில், புதிய அரசின் முதலாவது தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் வரும் ஜூன் 18ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை சட்டசபை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

    சட்டசபை கூட்டத்தொடர்

    சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும்போது, தமிழக ஆளுநர் அர்லேகர் உரையாற்ற இருக்கிறார். ஆங்கிலத்தில் இடம்பெறும் அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும். தொடர்ந்து, ஆளுநர் உரையை சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தமிழில் வாசிப்பார்.

    Advertisement

    அடுத்த 2 நாட்கள் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இதில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசுவார்கள். அதைத்தொடர்ந்து, 2026-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டில், தவெக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டசபை நிகழ்வுகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

    சபாநாயகர் பேட்டி

    சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக சட்டசபை கூட்டம் வருகிற 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு கூடுகிறது. அப்போது ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளார் என்றார்.

    Advertisement

    சட்டசபையில் அ.தி.மு.க.வினர் இரு பிரிவாக செயல்பட்டு உங்களிடம் புகார் மனு கொடுத்திருந்தார்களே? அதன் மீது முடிவெடுக்கப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவை அனைத்தும் எனது ஆய்வில் உள்ளது. விரைவில் முடிவை அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

    தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

    சமீபகாலமாக ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி வரும் தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தில் என்ன நடக்கும் என்பது ஆளுநர் உரை நிகழும்போது உங்களுக்கே தெரியும். சற்றே பொறுத்திருந்து நீங்களே பாருங்கள்" எனப் பதிலளித்துள்ளார்.

    English Summary

    Speaker JCD Prabhakar has announced that the first Assembly session of the TVK government will commence on June 18.