சென்னை: முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்து தவெக அரசால் குறி வைக்கப்பட்டு வருகிறார். மத்திய பாஜக அரசு ஒரு காலத்தில் செந்தில் பாலாஜியை டார்கெட் செய்தது போல மாநில அரசால் தற்போது எவ வேலு டார்கெட் செய்யப்படுகிறார். இதற்கு பின் பழைய பகை ஒன்று இருப்பதாக கூறப்படுகிறது!
முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிராக தமிழக அரசு பிறப்பித்த லுக் அவுட் நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. இந்தத் தடையை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த வழக்கை உடனடியாக அவசர வழக்காக நாளைக்கே விசாரிக்க வேண்டும் என்று அரசுத் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தலைமை நீதிபதி நிராகரித்துள்ளார். எனினும், மறுநாள் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது குறித்து பரிசீலிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நெடுஞ்சாலைத் துறை ஊழல் புகாரில்தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் எ.வ.வேலுவுக்கு எதிராக தவெக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், முதல்வர் விஜய் அரசு எ.வ.வேலுவை மட்டும் இந்த அளவுக்குத் தீவிரமாகக் குறிவைப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழலாம்! இதற்கு பின்னணியில் ஒரு மிகப்பெரிய அரசியல் பிளாஷ்பேக் மற்றும் தனிப்பட்ட பகை இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் இருக்கும் முக்கியப் புள்ளி, தவெகவின் பொதுப்பணி மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா ஆவார். கடந்த 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில், ஆதவ் அர்ஜுனா திமுகவுக்கு மிகவும் நெருக்கமான ஒரு தேர்தல் ஆலோசகராகவும் செயல்பட்டு வந்தார். குறிப்பாக, 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு முக்கியக் காரணியாக இருந்த ஐ-பேக் அமைப்பை திமுகவுக்கு அறிமுகப்படுத்தியதில் இவருக்கு முக்கியப் பங்கு இருந்தது. இதன் காரணமாக, கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் எம்பி சீட் பெறுவதற்கு ஆதவ் அர்ஜுனா தீவிரமாக முயன்றார். அவருக்கான வாய்ப்புகளும் பிரகாசமாக இருந்தன. ஆனால், திமுகவின் மூத்த தலைவரான எ.வ.வேலுதான் சீட் ஒதுக்குவதில் முடிவுகளை எடுத்தார். அவர்தான் இந்த ஏற்பாட்டுக்குக் கடுமையான முட்டுக்கட்டை போட்டதாகக் கூறப்படுகிறது. ஆதவ் அர்ஜுனாவுக்கு எம்பி சீட் வழங்கக் கூடாது என்பதில் எ.வ.வேலு பிடிவாதமாக இருந்ததால், கடைசி நேரத்தில் அவருக்கு திமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தமக்கு சீட் மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியடைந்த ஆதவ் அர்ஜுனா, திமுகவில் இருந்து வெளியேறினார். திமுகவின் இந்தச் செயலுக்கு எதிராகத் தனது அரசியல் வியூகங்கள் மூலம் பதிலடி கொடுக்கத் துணிந்தார். அந்தச் சமயத்தில்தான் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, 2026 தேர்தல் களத்தில் இறங்கத் திட்டமிட்டார். திமுகவில் இருந்து வெளியேறிய ஆதவ் அர்ஜுனா, தவெகவில் இணைந்து அக்கட்சியின் தேர்தல் வியூகங்களை வகுக்கும் முதன்மைப் பொறுப்பை ஏற்றார். தவெகவின் அசுர வளர்ச்சிக்கும், 2026 சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்கும் ஆதவ் அர்ஜுனாவின் தேர்தல் கணக்குகளும், களப்பணிகளும் மிக முக்கியக் காரணியாக அமைந்தன. இதன் மூலம், விஜய் அமைச்சரவையில் மிக முக்கியமான பொதுப்பணித் துறை அமைச்சராகவும் அவர் பொறுப்பேற்றார். திமுக ஆட்சியில் எவ வேலு வசம் இருந்த அதே பொதுப்பணித் துறையைத்தான் தற்போது தவெக ஆட்சியில் ஆதவ் அர்ஜுனா தன் கையில் வைத்துள்ளார். தனக்கு திமுகவில் எம்பி சீட் கிடைக்காமல் தடுத்த எவ வேலுவை, தவெகவின் அதிகார பலத்தைக் கொண்டு ஆதவ் அர்ஜுனா தற்போது குறிவைத்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். விஜய்யின் ஊழலுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், எ வ வேலுவுக்கு எதிரான லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் விவகாரங்களை உச்ச நீதிமன்றம் வரை கொண்டு செல்வதற்குப் பின்னால், ஆதவ் அர்ஜுனாவின் இந்த பழைய தேர்தல் பகையே முக்கிய சக்தியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.திமுகவின் 3 திமிங்கலங்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கும் விஜய்! அப்போ எவ வேலு! இப்போ செந்தில் பாலாஜி.!
ஆதவ் அர்ஜுனா எவ வேலு மோதல்
தவெகவின் தூணாக மாறிய ஆதவ் அர்ஜுனா
விஜய் குறித்து அவதூறு.. நடக்க முடியாத மாற்றுத் திறனாளியை கைது செய்த போலீஸ்! உடனே ரிலீஸ் செய்த கோர்ட்
பழைய பகை... புதிய பழிவாங்கல்?