எல்ஐசி 3 பென்ஷன் திட்டங்கள்! முதியோர்களுக்கு எந்தத் திட்டம் பெஸ்ட்? முழு விவரம் இதோ


  • சென்னை: மனித வாழ்க்கையின் மிக முக்கியமான காலகட்டமான முதுமைப் பருவத்தை நிம்மதியாகவும், பொருளாதார சுதந்திரத்துடனும் கழிக்க விரும்புவோருக்கு எல்ஐசியின் ஓய்வூதியத் திட்டங்கள் எப்பவுமே ஒரு சூப்பர் சாய்ஸ் ஆக கருதப்படுகின்றன. குறிப்பாக, அரசு மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் மட்டுமின்றி, சுய தொழில் செய்பவர்களுக்கும் தங்களின் சேமிப்பைப் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்து, ஆயுள் முழுவதும் ஒரு நிலையான வருமானம் பெற இத்திட்டங்கள் பெரிதும் உதவுகின்றன. அந்தவகையில் சில திட்டங்களை இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

    Advertisement

    சந்தை ஏற்ற இறக்கங்களின் தாக்கம் இல்லாத, குறைந்த அபாயமும் நிலையான வருவாயும் கொண்ட பாதுகாப்பான முதலீடுகளை எதிர்பார்ப்பவர்களுக்கு எல்ஐசி வழங்கும் இந்தத் திட்டங்கள் முதுமைக் காலத்திற்கான ஒரு நல்ல பொருளாதார அரணாக அமைகின்றன.

    Advertisement

    எல்ஐசி சூப்பர் திட்டம்

    முதுமைக் காலத்தில் ஒரு நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் எல்ஐசி நிறுவனம் பல்வேறு சிறப்பான ஓய்வூதியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

    ஒரு காலத்தில் மத்திய அரசால் முதியோர்களுக்காகக் கொண்டு வரப்பட்ட வரிஷ்தா ஓய்வூதிய பீமா யோஜனா மற்றும் பிரதான் மந்திரி வய வந்தனா யோஜனா போன்ற சில பழைய அரசு ஓய்வூதியத் திட்டங்கள் இப்போது புதிய முதலீட்டுக்குக் கிடைக்கவில்லை என்பதால், எல்ஐசி நிறுவனம் தற்போதைய சந்தை சூழலுக்கு ஏற்ப வழங்கி வரும் தனது சொந்த கட்டமைப்பிலான முதன்மையான ஆக்டிவ் பென்ஷன் திட்டங்கள் என்னென்ன தெரியுமா?

    Advertisement

    எல்ஐசி ஜீவன் அக்‌ஷய் - VII

    முதலாவதாக, எல்ஐசி ஜீவன் அக்‌ஷய் - VII என்ற திட்டம் உடனடி பென்ஷன் திட்டமாகச் செயல்படுகிறது. அதாவது உங்களிடம் ஒட்டுமொத்தமாக ஒரு பெரிய தொகை கையில் இருந்தால், அதை இந்த திட்டத்தில் ஒரே ஒரு முறை முதலீடு செய்துவிட்டு, அதற்கடுத்த மாதத்திலிருந்தே வாழ்நாள் முழுமைக்கும் பென்ஷன் வாங்கத் தொடங்கலாம்.

    30 வயது முதல் 85 வயது வரை உள்ள தகுதியுடைய நபர்கள் யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தில் இணைய முடியும் என்பதால், இது அனைத்துத் தரப்பினருக்குமான திட்டமாக உள்ளது.. இதிலுள்ள கூடுதல் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால், பாலிசிதாரர் தனது ஆயுள் முழுமைக்கும் பென்ஷன் பெறுவதுடன், அவருக்குப் பிறகு அவரது துணைவியாரும் அதே பென்ஷன் தொகையைத் தொடர்ந்து பெறும் வகையிலான பல்வேறு தேர்வுகள் இதில் வழங்கப்பட்டுள்ளன.

    Advertisement

    எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி திட்டம்

    இதற்கடுத்தபடியாக, எதிர்கால ஓய்வூதியத்திற்காக முன்கூட்டியே திட்டமிடுபவர்களுக்கு எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி திட்டம் ஒரு பெஸ்ட் தேர்வாக அமைகிறது. இப்போதே ஒரு தொகையை முதலீடு செய்துவிட்டு, நமக்கு தேவையானபடி சில வருடம் காத்திருந்து, அதுக்கு பிறகு பென்ஷன் வாங்க தொடங்கலாம்.

    இதில் நாம் தேர்வு செய்யும் பாலிசி முறை மற்றும் திட்டத்தின் வகையை பொறுத்து இந்த காத்திருப்புக் காலத்தின் விதிகள் மாறுபடும்.. ஆனாலும் இதில் நாம் காத்திருக்கும் காலம் எந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமக்கு கிடைக்கும் மாதாந்திர பென்ஷன் தொகையும் கூடுதலாக இருக்கும். இதுதான் இந்த திட்டத்தின் கூடுதல் சிறப்பம்சமாகும்.

    Advertisement

    எல்ஐசி சரள் பென்ஷன் திட்டம்

    அதேபோல எந்தவிதமான சிக்கலான விதிமுறைகளும் இல்லாத எளிய பென்ஷன் திட்டம் வேண்டுமானால் எல்ஐசி சரள் பென்ஷன் திட்டத்தை தாராளமாகத் தேர்வு செய்யலாம்.

    இந்தியக் காப்பீடு ஒழுங்குமுறை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டத்திலும் ஒற்றை முறை முதலீடு செய்து உடனடியாக பென்ஷன் பெற முடியும். இதில் பாலிசிதாரர் தேர்வு செய்யும் ஆப்ஷனைப் பொறுத்து, அவரது வாழ்நாளுக்குப் பிறகு அவர் முதலீடு செய்த தொகை அவரது வாரிசுதாரர்களுக்குத் திரும்ப கிடைக்கும் வசதியும் இதில் உள்ளது.

    அதுமட்டுமல்ல, இந்த திட்டங்களின் குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டு அவசரக் காலங்களில் கடன் பெறும் வசதியும், பாலிசியை ஒப்படைக்கும் வசதியும் இருப்பதால், அவசர தேவைகளுக்கும் இது ஓரளவுக்குக் கைகொடுக்கிறது. சுருக்கமாக சொன்னால், இப்போதைக்கு வயது, முதலீடு செய்யக்கூடிய தொகை, உங்களுக்கு எப்போது பென்ஷன் தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து, இவற்றில் சரியான திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.

    English Summary

    LIC 3 Pension Plans Explained! Which One Is Best for Senior Citizens? Full Details Here