கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை


  • சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்தும், 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்தும் தாக்கல் செய்த உரிமையியல் வழக்குகளை திரும்பப் பெற, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரும், தற்போதைய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரும், சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதி கோரிய மனு இன்று விசாரணைக்கு வருகிறது.

    Advertisement

    அதிமுக பொதுக்குழு கூட்டம், 2022 ஆம் ஆண்டு ஜூன் 23ல் நடந்தது. இந்தக் கூட்டத்தில் தான் ஒற்றைத் தலைமை தொடர்பாக குரல் எழுப்பப்பட்டது. இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, அதிமுக நிர்வாகி வைரமுத்து வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, தடை விதிக்க மறுத்து உத்தரவிட்டார்.

    Advertisement

    அதைத் தொடர்ந்து, ஜூலை 11 ஆம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க கோரி, கட்சி ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தாக்கல் செய்தார். ஆனால், தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

    கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து, பொதுச்செயலாளர் பதவி உருவாக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஜே.சி.டி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கி, சிறப்பு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நிலுவையில் உள்ளன.

    Advertisement

    தற்போது ஓ.பன்னீர்செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் உள்ளனர். இந்த மூவருமே, திமுக சார்பில் போட்டியிட்டு வென்று தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ளனர். ஜே.சி.டி.பிரபாகர் தவெகவில் இணைந்த நிலையில், அவர் தற்போது சபாநாயகராக உள்ளார்.

    இந்நிலையில், இந்த சிவில் வழக்குகளை திரும்ப பெற அனுமதி கோரி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தரப்பில், உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கடிதங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், ஓபிஎஸ் உள்ளிட்டோர் தாக்கல் செய்த சிவில் வழக்குகள், திரும்பப் பெறுவதற்கான தலைப்பில், நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் நேற்று விசாரணைக்கு வந்தன.

    ஆனால், அவர்கள் கொடுத்த கடிதம் ஐகோர்ட் பதிவுத்துறையில் இருந்து நீதிமன்ற அறைக்கு வரவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை இன்று (வியாழக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

    Advertisement

    இதே போல, கட்சி நடவடிக்கைகளில் தலையிடவும், கட்சி கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தவும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு தடை கோரி, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கும் திரும்ப பெற பட்டியலிடப்பட்டு இருந்தது. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

    English Summary

    Petition seeking permission from the Madras High Court to withdraw the civil suits filed to challenge their expulsion from the AIADMK—as well as the General Council meeting held on July 11, 2022—filed by O. Panneerselvam and others, including current Speaker JCD Prabhakar, is scheduled to come up for hearing today.