MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?


  • சென்னை: திமுக கூட்டணியில் தொடர்ந்தாலும், எதிர்கால அரசியல் நகர்வுகளுக்காக தவெகவுடன் நெருக்கம் காட்டும் போக்கை மதிமுக கடைப்பிடிக்கிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. இந்த சூழலில் தான் மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 20 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதில் திமுகவுடன் கூட்டணியில் தொடர்வதா இல்லை தவெகவுடன் கூட்டணியில் சேர்வதா என்ற முடிவு எடுக்கப்படும் என கூறப்படும் நிலையில், மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பில்லை என்று மதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ஒருவர் தெரிவித்துள்ளார்.

    Advertisement

    சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு திமுக கூட்டணியில் இடம் பெற்ற விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவெகவுடன் கை கோர்த்துள்ளன. திமுக கூட்டணியில் இன்னும் மதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் மட்டுமே உள்ள சூழலில், மதிமுகவின் சமீபத்திய செயல்பாடுகள், திமுகவை கை கழுவ தயாராகி வருகிறதா? என நினைக்கும் படியாக உள்ளது.

    Advertisement

    மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய மாட்டார்கள்

    இதற்கு வலு சேர்க்கும் விதமாக துரை வைகோவின் நேற்றைய பேட்டியும் இருந்தது. நேற்று விஜய் அரசு விழாவிற்காக வரவில்லை என்ற போதிலும் கூட திருச்சி வந்த விஜய்யை துரை வைகோ விமான நிலையம் சென்று பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மக்களவை எம்பி என்ற முறையில் வரவேற்பு கொடுத்ததாக கூறிய துரை வைகோ, தனி சின்னத்தில் போட்டியிடாமல் போய்விட்டோம்.. தனி சின்னத்தில் வென்று இருந்தால் தவெகவிற்கு ஆதரவு கொடுத்து இருக்கலாம் என்ற ரீதியில் பேசியிருந்தார்.

    வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவில் கூட்டணி குறித்த முடிவை எடுக்க இருப்பதாகவும் மதிமுக தரப்பில் கூறப்படும் நிலையில் மதிமுகவை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ கூறுகையில், மதிமுக எம்எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய மாட்டர்கள் என்ற கருத்தை முன்வைத்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-

    Advertisement

    விஜய்யுடன் கூட்டணி வைக்க துரை வைகோ விரும்பினார்

    2026 சட்டசபை தேர்தலுக்கு முன்பாகவே துரை வைகோ விஜய்யின் தவெகவுடன் கூட்டணி சேர்வதற்கு விருப்பப்பட்டார். அதுவே அவரது முடிவாகவும் இருந்தது. ஆனால் வைகோ ஆளும் கட்சியோடு இருக்கவே விருப்பப்பட்டார். அதன்படி தான் தேர்தலை சந்தித்தோம். இப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவீர்களா என்று கேட்கிறீர்கள்.. ஆனால் அதற்கு வாய்ப்பு இல்லை. மதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய வாய்ப்பு மிக மிக குறைவு தான்.

    வரும் 20 ஆம் தேதி மதிமுக பொதுக்குழு கூட உள்ளது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம். ஆனால் இரு எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய வாய்ப்பு குறைவு தான்.. எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்யாமல் வெளியில் இருந்து தவெக அரசுக்கு ஆதரவு அளிக்கும் விதமாகவே முடிவு எடுக்கப்பட வாய்ப்பு உள்ளது. வரும் தேர்தல்களில், அதாவது உள்ளாட்சி தேர்தலின் போதோ அல்லது நாடாளுமன்ற தேர்தலின் போதோ தவெகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளது. இப்போதைக்கு திமுக கூட்டணியில் இருந்து வெளியில் வர வாய்ப்பு இல்லை.

    Advertisement

    இடைத் தேர்தலை சந்தித்து, அதில் மீண்டும் வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறுவது என்பது வைகோ மற்றும் தொண்டர்களின் விருப்பமாக இல்லை" இவ்வாறு அவர் கூறினார்.

    2 தொகுதிகளில் மதிமுக வெற்றி

    நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற ஐயுஎம்எல், சிபிஎம், சிபிஐ, விசிக ஆகிய கட்சிகள் தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்துள்ளது. இதில் விசிகவில் இருந்து வன்னியரசும், ஐயுஎம்.எலில் இருந்து ஷாஜகானும் அமைச்சர் ஆகியுள்ளனர். காங்கிரஸ் கட்சி திமுகவை விட்டு விலகி தவெகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

    Advertisement

    இந்த தேர்தலில் வைகோவின் மதிமுக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. தவெக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின் போதும் மதிமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த 2 எம்.எல்.ஏக்களும் பங்கேற்காமல் புறக்கணித்தனர். விஜய் தனது இல்லத்திற்கு வந்து சந்தித்த போதும் வைகோ மிகுந்த உற்சாகத்தில் காணப்பட்டார். தனிச் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தால் நிச்சயம் விஜய்க்கு ஆதரவு அளித்து இருப்பார் என்றே அரசியல் தெரிந்தவர்களால் பேசப்பட்டது.

    துரை வைகோ கூறியது என்ன?

    இதையே தான் நேற்று துரை வைகோ பேசியிருந்தார். துரதிருஷ்டவசமாக நாங்கள் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டுவிட்டோம். தவெகவுக்கு ஆதரவு அளிக்க முடியாமல் போய்விட்டது.. என்று பேசியிருந்தார். துரை வைகோ பேசும் போது, "ஒரு கட்சியின் கொள்கைக்கு எதிராகச் சட்டமன்றத்தில் மாற்றி வாக்களித்தால் மட்டுமே அது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் வரும். கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றுவதால் சட்டப்படி எந்தப் பாதிப்பும் வராது" என்றார்.

    Advertisement

    மேலும் குதிரை பேர குற்றசாட்டுகளையும் நிராகரித்த துரை வைகோ, மக்கள் பிரதிநிதி தன் கட்சியின் தலைமை எடுத்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் பிற இயக்கங்களுக்குச் செல்வதோ அல்லது அரசியலை விட்டு ஒதுங்குவதோ அவருடைய தனிப்பட்ட ஜனநாயக உரிமை, அதைத் தடுக்க முடியாது"என்றும் கூறினார். வைகோ மற்றும் துரை வைகோவின் சமீபத்திய பேச்சுகள் தவெகவிடம் அதிக நெருக்கம் காட்டுவதை அப்பட்டமாக காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

    திமுக கூட்டணியில் நீடிக்குமா?

    எனினும், திமுக கூட்டணியில் நீடிப்பதாகவே வைகோ கூறி வருகிறார். திமுக கூட்டணியில் மதிமுக நீடிக்குமா? அல்லது கை கழுவிட்டு செல்லுமா? என்பது வரும் 20 ஆம் தோதி பொதுக்குழுவில் தெரிய வரும் என்று தெரிகிறது. வைகோவின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் தற்போதே கவனம் பெறத் தொடங்கியுள்ளது. ஒருவேளை வைகோவும் வெளியேறிவிட்டால் திமுக அநேகமாக தனித்துவிடப்படும் சூழலுக்கு தள்ளப்படும்.

    English Summary

    MDMK Vaiko: Speculation continues over MDMK’s future political alignment after Durai Vaiko’s remarks and outreach to Vijay. Party sources suggest MDMK MLAs are unlikely to resign, while the party may explore a strategy of extending support to the TVK government without quitting the DMK alliance.